பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

காதுக்கு இனிமையும் தேவையெனில், எம்மொழியில் இசைபாடப்படுகிறது என்பதைக் கவனித்தாக வேண்டும். இது பாடலைப் பொறுத்தமட்டில், இன்றியமையாத தாகும். இசைக் கருவிகள், நாதத்தைத் தரும். மொழிப் பிரச்சினை அங்கு இல்லை. ஆனால், வாய்ப்பாட்டுக்கு மொழிப் பிரச்சினை முக்கியம். அவர் பாடுகிறார் என்றால் "சஹானா ராக ஆலாபனம் செய்தார்; பிறகு இந்தக் கிருதியைப் பாடினார்: அதிலே ராம சௌந்தரியம் அழகாகக் கூறப்பட்டது" என்றுதான் அக்கிரகாரமும் பேசும். சாஹித்தியம், சங்கீதத்துக்கு, மலருக்கு மணம் போன்றது. அந்த மணம், நறுமணமாக இருக்க வேண்டும் என்று தமிழர் கூறுகின்றனர் 'இது தகுமா? இது முறையா' என்று ஆரியர் ஆர்ப்பரிக்கின்றனர். ஓடிந்த உள்ளங்களை ஒன்றாக்குவிக்கும் இசை விஷயமாக இன்று, எழும் கிளர்ச்சி இதுவரை ஒடியாதிருக்கும் உள்ளங்களையும் ஒடித்துவிட முற்பட்டு விட்டது.

ராஜா சர். அண்ணாமலையார் ஆற்றியுள்ள அருந்தமிழ்த் தொண்டை, இங்ஙனம் திரித்துக் கூறி, அவரது முயற்சியைக் குலைப்பது கண்டு. நாம் மனங் கலங்கவில்லை: கொதிப்படையவுமில்லை. மாறாகக் களிக்கிறோம்! ஏனெனில், வகுப்புவாத நோக்கமற்று, இசைக்கும் தமிழுக்கும் அவர் உணர இஃதோர் வாய்பு! அதனை அவர் உணர்ந்து, அவரும் ஓர் வகுப்புவாதியாகிவிட்டால், அக்கிரகாரத்தின் ஆதிக்கம் அழிவது திண்ணம். ஆகவே, இன்று ஆரியர் கிளப்பும் எதிர்ப்பு, அவர்களுக்கே கேடு தரத்தான் போகிறது என்று நிச்சயமாக நம்புகிறோம். அந்த நம்பிக்கை நமது மனதில் களிப்பை ஊட்டுகிறது.


"கூவுங்கள் ஆரியர்களே! கொக்கரியுங்கள்! தமிழ் மீது மோதிக்கொள்ளுங்கள். தமிழரின் முயற்சிக் கெல்லாம் தடைசெய்யுங்கள்; தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்: தமிழிலே வட மொழியை, ஆங்கிலத்தை. இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள். தமிழன், தன்னைத் தமிழன் என்று