பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

ஐரோப்பியருக்கு எடுத்துக் கூறினார். தமிழர் என்ற உணர்ச்சி மங்கிற்று. ஆரியரின் பிரசாரம் ஆங்கில நாட்டவரையும் மயக்கிற்று. விபசாரியிடம் சிக்கி வீட்டிலுள்ளோரை இழிவுபடுத்தி, வீட்டுப் பொருள்களை பாழாக்கும் காமாந்தகாரனின் கதைபோல, ஆரியரிடம் மயங்கிய ஆங்கிலேயன் நாட்டுக்குடையவர்களாகிய நம்மவரைப் புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆட்சி பீடத்திலே ஆரியரை சர்வாதிகாரியாக்கினர். தமிழர் தத்தளித்தனர். அந்த தத்தளிப்பு தன்னுணர்வைத் தந்தது. தன்னைத்தான் அறியத் தொடங்கிய பிறகு, தமிழன் தான் இழந்தவைகளைத் தேடத்தொடங்கினான். தேடிக்கொண்டும்கிறான். தமது அழிவுக்குக் காணம் என்ன என்று கண்டுபிடித்தான். அதனைக் களைய முற்படுகிறான். தூங்கியவன் விழித்தது போல் இன்று தமிழரிடை ஒரு எழுச்சி உண்டாகியிருக்கிறது. இந்த மறுமலர்ச்சியைப் பல்வேறு துறைகளில் காண்கின்றோம். தமிழ் மொழியில் துவங்கி, தமிழ் நாடு என்ற எண்ணம் வரை இந்த மறுமலர்ச்சி இருக்கிறது.

வழி தவறி அலைந்தவன், நேர் வழி தெரிந்து நடக்க ஆரம்பிக்கும்போது, செந்நாய் சீறினாலும், சிறுத்தை உறுமினாலும், சிந்தை கலங்கத் தேவையில்லை. நமது பாதையை நாம் விட்டு அகலோம் என்றே உறுதிகொள்ள வேண்டும். மனம் இருக்க மார்க்கம் இல்லாது போகுமா?

இத்தகைய மறுமலர்ச்சி. இன எழுச்சி-இயல்பு—இதுபோல் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. ஆனால் இங்கு இருப்பது போன்ற எதிர்ப்பு அங்கு இருந்ததில்லை.

15, 16-வது நூற்றாண்டுகளில், ஐரோப்பாவிலே பல்வேறு நாடுகளிலே, இத்தகைய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அந்தக் காலத்திலே விளைந்த பலன்களே அந்நாடுகளை மேன்மைப்படுத்தின.