மானேஜர் காமேஸ்வரய்யர் கரூரில் சில தகிடுதத்த வேலைகள் செய்ய ஆரம்பித்தார். நாடகம் முடிந்ததும் காலையில் கணக்குப் பார்க்கும் பொறுப்பு மானேஜரிடம் ஒப்படைக்கப் பெற்றது. இரவு கொட்டகையில் கூட்டம் பிரமாதமாக இருக்கும். ஆனால் காலையில் வசூல் கணக்கைப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கும். இது எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. அந்த நாளில் தரை டிக்கட்டுகளைக் கொஞ்சம் கனமான அட்டை களிலேயே அச்சிட்டுக்கொடுத்து வந்தார்கள். பலவண்ண அட்டைகளில் இவற்றை அச்சிட்டு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாடகத்திற்கும் வண்ணங்களை மாற்றிக் கொள்வது வழக்கம். தவிர டிக்கெட்டுகளைக் கிழிப்பதில்லை. மானேஜர் ஐயர் ஒரு தந்திரம் செய்தார். தரை வாயிலில் டிக்கெட்டுகளை வாங்கி ஒரு பெட்டியில் போட்டு விடுவார்கள். மானேஜர் காலையில் அந்தப் பெட்டியைத் திறந்து விற்பனையான டிக்கெட்டுகளில் பலவற்றை மறுபடியும் கணக்குப் பெட்டிக்குள் வைத்து விட்டு அவற்றுக்குரிய பணத்தை எடுத்துக் கொள்வார். இப்படியே ஐயரின் வேலை நடைபெற்று வந்தது. ஒருநாள் பெரியண்ணா சந்தேகங்கொண்டு. ஐயருக்குத் தெரியாமல் இரவே வசூல் கணக்கைப் பார்த்து முடித்து விட்டுப் பெட்டிச் சாவியை ஐயரிடம் கொடுத்து விட்டார். விபரம் தெரியாத ஐயர், வழக்கம்போல் தமது காரியத்தைச் செய்யவே அவருடைய திருட்டு வெளிப்பட்டு விட்டது. மாமா, ஐயரை உடனே நீக்கிவிட வேண்டுமென்று ஆத்திரப்பட்டார். பெரியண்ணா சிபாரிசின் பேரில் ஐயருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மானேஜரிடம் பெட்டிச் சாவி கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மாமாவே முன்னின்று எல்லாக் காரியங்களையும் மேற்பார்த்து வந்தார். மானேஜருக்கு வெளி அலுவல்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அடுத்த ஊர் திருப்பூர் போவதாக முடிவு செய்தனர்
பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/180
Appearance