பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடக உலகில் ஒளவயைார்


தமிழ் மூதாட்டி ஒளவையாரை நாடக மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்பது எங்கள் நீண்ட நாளைய அவா. மதுரை நகர மக்கள் அளித்த பேராதரவினல் அதுவும் சாத்திய மாயிற்று. ஒளவையாரை அரங்கேற்றியதுதான் எங்கள் நாடக வாழ்க்கையின் வெற்றிச் சின்னமெனக் கருதுகிறோம்.

நாடகாசிரியர் எதிராஜுலு

இராஜபாளையத்தில் இருந்தபொழுது, போர்டு பாடசாலைத் தமிழாசிரியர் பி. எதிராஜுலு நாயுடு எங்களுக்கு அறிமுகமானார். ஒளவையாரை மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆர்வத்தை அவரிடம் கூறினேன். உடனே எழுதித் தருவதாக வாக்களித்தார். நாடகத்தை நல்ல முறையில் தொகுத்து மதுரையிலே கொடுத்தார். ஒளவை நாடக நிகழ்ச்சிகள் ஒன்றாேடு ஒன்று தொடர்புடையன அல்ல. ஒளவைப் பெருமாட்டியையே மையமாகக் கொண்டு, பல்வேறு இடங்களில், பல சந்தர்ப்பங்களில் நிகழும் பலதிறப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந் நாடகம். கல்வி முறை, அரசு முறை, நீதிமுறை, உழவு முறை, இல்லற முறை முதலிய அரும்பெரும் உறுதிப் பொருள்களாகிய மக்களது ஒழுக்க வழக்க நியமங்கள் அனைத்தும் நகைச்சுவையோடு கலந்து இந் நாடகத்தில் தரப்படுகின்றன. ஒளவையை நடிக்க ஆசைப்பட்டோம். நாடகமும் கையில் கிடைத்தது. இனித் தனித்தனியே பாடங்கள் எழுதி நடிகர்களுக்குக் கொடுக்க வேண்டும். இங்கேதான் வந்தது சங்கடம்.

ஒளவையாராக யார் நடிப்பது?

தமிழ் நாடக உலகில் இறவாத புகழுடைய நாடகமாகப் பண்டிதருக்கும் பாமரருக்கும் மகிழ்வூட்டிப் பண்பை வளர்க்கும் நாடகமாக-புகழின் எல்லையைக் கண்ட நாடகமாக ஒளவையார்