பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

என் சரித்திரம்

சிதம்பரம் பிள்ளையிடம் இருந்து கணக்கு வேலை பழகி வந்தேன். என் தகப்பனார் எனக்குக் கணக்கு வேலை பழக்கி வைக்க வேண்டுமென்று மிக்க ஆவலாக அவரிடம் கேட்டுக் கொண்டார்.

நான் சிதம்பரம்பிள்ளையிடம் உதவிக் கணக்கு உத்தியோகத்தை வகிக்கலானேன். கிராமக் கணக்கு வகைகளைப் பதிவதற்குத் தனித் தனியே அச்சிட்ட ‘நமூனா’க்கள் வரும். அவற்றில் ஒழுங்காக ‘ரூல்’ போடுவது முதல் கணக்குகளைப் பதிவு செய்வது வரையில் எல்லா வேலைகளையும் நான் செய்து வந்தேன்.

இயற்கை தந்த இன்பம்

சிதம்பரம் பிள்ளை தினந்தோறும் கிராமத்திலுள்ள புன்செய்க் காடுகளுக்குச் சென்று வருவார்; கணக்குப் பிள்ளை உத்தியோக முறையில் நிலங்களிற் செய்யப்படும் சாகுபடி முதலியவற்றைக் கவனிப்பதற்குச் செல்வார். அச்சமயங்களில் நானும் அவருடன் செல்வேன். அவர் வழக்கப்படி காரியங்களைக் கவனிப்பார். அக்காடுகளின் தோற்றம் எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

பயிர்கள் வகை வகையாகக் கொல்லைகளில் விளைந்து கதிர்விட்டிருப்பதும், அங்கங்கே புன்செய் நிலங்களில் இடையிடையே மொச்சை, துவரை முதலியவை வளர்ந்திருப்பதும் என் கண்களைக் கவரும். எவருடைய பாதுகாப்பையும் வேண்டாமல் இயற்கையாகப் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிகளும் துளசியும், நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும் வில்வம், வன்னி முதலிய மரங்களும், மலர்ந்திருக்கும் அலரியும் பிறவும் இயற்கைத் தேவியின் எழிலைப் புலப்படுத்திக்கொண்டு விளங்கும். கம்பு விளையும் நிலத்தருகே கரைகளில் துளசி படர்ந்திருக்கும். கணக்குப்பிள்ளை கம்புப் பயிரை மாத்திரம் கண்டு மகிழ்வார்; அதனால் உண்டாகும் வருவாய்க் கணக்கில் அவர் கருத்துச் செல்லும். நான் அவரோடு பழகியும் அத்தகைய கணக்கிலே என் மனம் செல்வதில்லை. கம்பங் கதிர் தலை வளைந்து நிற்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன்; துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் கதிர்விட்டிருக்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன். “கம்பிலே தான் காசு வரும்; துளசியிலே என்னவரும்?” என்ற வியவகார புத்தி எனக்கு இல்லை. இரண்டும் என் கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சியை அளித்தன. வில்வமரமும் வன்னிமரமும் எனக்கு இயற்கைத் தாயின் எழில் வடிவத்தின் ஒரு பகுதியாகவே தோற்றின. மனிதன் வேண்டுமென்று வளர்க்காமல் தாமே எழுந்த அவற்றில் இயற்கையின் அழகு அதிகமாகவே விளங்கியது.