பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

என் சரித்திரம்

சிதம்பரம்பிள்ளைக்கு ஒருபால் சிரிப்பும் ஒருபால் கோபமும் உண்டாயின.

அப்புலவர் இலக்கண இலக்கியப் பயிற்சி சிறிதும் இல்லாதவர். பழம் பாடல்களைச் சொல்லி இடையிடையே தாம் காணும் பிரபுக்களின் பெயர்களைச் செருகித் தாம் பாடியனவென்று ஏமாற்றிப் பணம் பறிப்பவர். சில இடங்களில் பொருள் தராதவரை வைது பாடுவதும் உண்டு “அறம் வைத்துப் பாடுவோம்” என்று பயமுறுத்தி ஜனங்களை நடுங்கச் செய்வதிலும் வல்லவர். ஒருவர் மேல் அறம் வைத்துப் பாடினால் அவர் இறந்து விடுவாரென்ற நம்பிக்கையொன்று அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது. அவர் பெரும்பாலும் கல்விமான்கள் இல்லாத கிராமங்களாகப் பார்த்துச் சென்று ஜனங்களை மருட்டிப் பணம் ஈட்டி வருவார். இந்த ஊரையும் அப்படியே நினைத்து வந்தார் போலும்!

சிதம்பரம் பிள்ளைக்கு அவர்பால் கோபம் உண்டாயினும், “தமிழின் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறானே; இவ்வளவு பேர்களையும் காப்பாற்ற வேண்டும்?” என்றும், அவர்களுக்கு ஒருவேளை உணவுக்காவது உதவ வேண்டுமென்றும் எண்ணி மூன்று ரூபாய் கொடுத்தார்.

அப்பொழுது புலவருக்கு வந்த கோபத்தைப் பார்த்தபோது அங்கு நின்ற பலர், “ஐயோ, இவர் சிதம்பரம் பிள்ளையின் மேல் அறம் வைத்துப் பாடிவிடுவாரோ’ என்ற பயத்தாலே கலக்கமடைந்தனர்.

“நான் பிச்சை எடுக்கவா வந்தேன்? ராஜாங்கத்து வித்துவானாகிய என் கௌரவத்தை நீங்கள் அறிந்ததாகத் தெரியவில்லையே” என்று அவர் படபடத்துப் பேசினர்.

தைரியசாலியாகிய சிதம்பரம் பிள்ளை புன்னகை செய்துகொண்டே அவரைத் தனியே அழைத்துச் சென்றார். “இம்மாதிரி என்னை மருட்டிவிடலாமென்று எண்ண வேண்டாம். உம்முடைய கல்வியின் ஆழம் இவ்வளவென்று எனக்குத் தெரிந்து விட்டது. இந்த மூன்று ரூபாயும் உம்மேல் இரக்கத்தால் கொடுப்பதேயன்றி உமது புலமைக்காக அன்று. அது வேண்டாமென்று பிடிவாதம் செய்தால் இதுவும் இல்லாமல் பட்டினியோடு வந்த வழியே போகவேண்டியதுதான். உம்முடைய ஆடம்பரத்தைக் கண்டு மயங்குவேனென்றும், வீண் வார்த்தைகளைக் கேட்டு அஞ்சுவேனென்றும் நினைக்க வேண்டாம்” என்று எச்சரித்தார். பாவம்! அந்தப் புலவர் அடங்கினார்; அந்த மூன்று ரூபாயை வாங்கிக்கொண்டு தம் கூட்டத்துடன் திரும்பிப் போய்விட்டார்.