பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

என் சரித்திரம்

“ஏன்? இன்னும் சில தினங்கள் இருந்து மாயூரநாத ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு போகலாமே.”

“அயலூரில் அயலார் வீட்டில் எவ்வளவு காலம் இருப்பது? என்னுடைய பூஜை முதலிய விஷயத்திற்கு இவ்வூர் சௌகரியமாக இல்லை. தவிர, இங்கே எனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லை. வந்த காரியம் ஈசுவர கிருபையாலும், உங்களுடைய தயையினாலும் நிறைவேறியது. இவனை உங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இவன் இனிமேல் விருத்தியடைவான் என்ற தைரியம் எனக்கு உண்டாகிவிட்டது. நான் என்னுடைய காரியங்களை இனிமேல் கவனிக்க வேண்டாமா?”

“சரி; போய் வாருங்கள். ஞாபகம் இருக்கட்டும்.”

“இவனைப் பற்றி இனிமேல் ஒரு கவலையுமில்லை என்று தெளிவாகத் தெரிந்தாலும் காரணமில்லாத துன்பமொன்று மனத்தில் உண்டாகிறது இவனை நான் பிரிந்து இருந்ததே இல்லை. இவனுடைய தாய்க்கு இவனை ஒருநாள் பிரிந்திருந்தாலும் சகிக்க முடியாத துயரம் ஏற்படும். இப்போது இவனைப் பிரிந்து செல்வதற்கு மனம் தயங்குகிறது. தனக்கு வேண்டிய காரியங்களைப் பிறர் உதவியின்றிக் கவனித்துக்கொள்ளும் வழக்கம் இவனுக்கு இல்லை. தாங்கள் இவனை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் ஸ்தானத்தில் இருந்து இவனைக் காப்பாற்றுவது தங்கள் கடமை.”

இப்படிச் சொல்லும்போது என் தகப்பனார் கண்களில் நீர் துளித்தது. அதுகாறும் அவர் அவ்வாறு என்னைப் பற்றி வருந்தியதை நான் பார்த்ததில்லை. அவர் உள்ளத்துக்குள் மறைந்து கிடந்த அன்பு முழுவதும் அப்போது வெளிப்பட்டது. அவர் கண்களில் நீரைக் கண்டு எனக்கும் மனம் கலங்கியது; கண்ணீர் துளித்தது; துக்கம் பொங்கி வந்தது.

அவரது அன்பை நன்கு உணர்ந்த என் ஆசிரியர் புன்னகை பூத்துக்கொண்டே, “நீங்கள் இவருடைய பாதுகாப்பைக் குறித்துச் சிறிதும் கவலைப்படவேண்டாம். நான் ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் தைரியமாக ஊருக்குப் போய்வாருங்கள். இவரைப் பார்க்க வேண்டுமென்று எப்போது விரும்புகிறீர்களோ அப்போது இவரை உங்களிடம் அனுப்புகிறேன். நீங்களும் அடிக்கடி இந்த ஊருக்கு வந்து பார்த்துவிட்டுப் போகவேண்டும்” என்று கூறி விடையளித்தார்.