பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன புண்ணியம் செய்தேனோ!

185

கவிஞரைக் குறித்துப் பொறாமையின்றி மனம் குளிர்ந்து பாராட்டுவது அருமை யன்றோ?

‘போகப் போகத் தெரியும்’

திருவண்ணாமலையை ஒரு முறை வலம் வருவதற்குள் நூறு பாடலைச் சிவப்பிரகாசர் பாடி முடித்தார் என்ற செய்தி எனக்கு அதிக வியப்பை விளைவித்தது. பாடங்கேட்டு முடிந்தவுடன் சவேரிநாத பிள்ளையிடம் பேசுகையில், “சிவப்பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களை நான் பார்த்திருக்கிறேன். வெங்கனூருக்கு அருகிலுள்ள பிரதேசங்களில் ஊர் ஊராக அவருடைய பெருமையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும் இந்தச் சமாசாரம் இன்று ஐயா அவர்கள் சொல்லத்தான் கேட்டேன். நூறு பாடல்களை ஒரே சமயத்தில் பாடம் சொல்பவர்களையே காணாமே? அப்படியிருக்க ஒரே சமயத்தில் நூறு செய்யுட்களைக் கற்பனையுடன் பாட வேண்டுமென்றால் அவர் தெய்வப் பிறவிதான் என்பதில் சந்தேகமே இல்லை” என்றேன் நான்.

“ஆச்சரியந்தான். அத்தகைய ஆச்சரியத்தை நாம் இங்கேயே பார்க்கலாம். பிள்ளையவர்கள் சிவப்பிரகாசருக்குக் குறைந்தவரல்லர். நூறு அல்ல, இருநூறல்ல, ஒரே மூச்சில் நூற்றுக்கணக்கான சுவையுள்ள செய்யுட்களை இவர்கள் பாடுவார்கள். எல்லாம் போகப் போக உமக்குத் தெரியவரும்’ என்றார் “அத்தகைய சந்தர்ப்பம் வராதா?” என்று நான் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன்.

பாட வரிசை

பழமலைத்திரிபந்தாதி முடிந்தது; திருப்புகலூர்த் திரிபந்தாதி ஆரம்பிக்கப்பட்டது. நெற்குன்றவாண முதலியாரென்பவர் பாடிய அதில் என் ஆசிரியருக்கு விருப்பம் அதிகம். அதைப் பாடஞ்சொன்னபோது ஒவ்வொரு செய்யுளிலும் அடிக்கொரு தரம், “என்ன வாக்கு! என்ன நயம்!” என்று பாராட்டுவார்.

அப்பிரபந்தம் முடிந்தவுடன் மறைசையந்தாதியைப் பாடங் கேட்டேன். ஒரே நாளில் அதைக் கேட்டு முடித்தேன். திரிபந்தாதிகளுக்குப் பிறகு பிள்ளையவர்கள் இயற்றிய தில்லையமகவந்தாதி, துறைசையமகவந்தாதி என்பவைகளையும் திருவேரகத்துயமகவந்தாதியையும் கேட்டேன்.

பண்டைக் காலத்தில் பதங்களைப் பிரித்துப் பழகுவதற்கும் பலவகையான பதங்களைத் தெரிந்துகொள்வதற்கும் மனனம்