பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்தாணிப் பாட்டு

329

திருச்சிற்றம்பலக் கோவையார்

அவ்விருவர்களுள் ஒருவராகிய மருதபண்டாரமென்பவருக்கும் எனக்கும் ஆசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடஞ்சொல்லி வந்தார். நாங்கள் அதைக் கேட்பதோடு தனியே இருந்து சிந்திப்பதும் உண்டு. ஒருநாள் மடத்து முகப்பில் தம்பிரான்கள் சிலரும் காரியஸ்தர்கள் சிலரும் கூடியிருந்தார்கள். அவர்களிற் சிலர் என்னை நோக்கிக் கோவையாரிலிருந்து சில செய்யுட்களைச் சொல்லிப் பொருளும் சொல்லவேண்டுமென்று விரும்பினர். நான் பைரவி ராகத்தை ஆலாபனம் செய்து சில செய்யுட்களைச் சொல்லி விரிவாகப் பொருளும் உரைத்தேன். யாவரும் திருப்தியுற்றார்கள்.

அப்பொழுது அங்கே கேட்டுக்கொண்டிருந்த பூஷை வைத்தியலிங்கத் தம்பிரானென்னும் பெரியார், “கோவையார் புஸ்தகம் உங்களிடம் இருக்கிறதா?” என்றார். “இல்லை” என்றேன். உடனே அவர் எழுந்து தம்முடைய அறைக்குச் சென்று அங்கே வெகுஜாக்கிரதையாக வைத்திருந்த திருவாசகமும் கோவையாரும் சேர்ந்த பழைய அச்சுப்பிரதி ஒன்றைக் கொணர்ந்துகொடுத்தார். “இப்படி லாபம் கிடைக்குமானால் தினந்தோறும் நான் இவ்வாறு உபந்நியாசம் செய்வேனே” என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு படித்து வரலானேன்.

இடையிடையே ஆசிரியர் திருப்பெருந்துறைப் புராணச் செய்யுட்களை இயற்றி வந்தார். குமாரரது கலியாணத்தில் ஏற்பட்ட செலவில் அவருக்குக் கடன் இருந்தது. அதை நீக்குவதற்கு வழி தெரியவில்லை. அத்துயரமும் பாடம் சொல்லும் வேலையும் சேர்ந்தமையால் இயல்பாக உள்ள உத்ஸாகத்தோடு புராணத்தை இயற்ற முடியவில்லை; அது மெல்ல நடந்து வந்தது.

அத்தியாயம்—54

எழுத்தாணிப் பாட்டு

சிதம்பரம் பிள்ளையின் கலியாணத்துக்காக என் ஆசிரியர் தம் அளவுக்கு மேற்பட்ட பணத்தைச் செலவு செய்தார். செலவிடும்போது மிகவும் உத்ஸாகமாகவே இருந்தது. கலியாணமானபின் ஜவுளிக்கடைக்காரர்களும் மளிகைக்கடைக்காரர்களும் பணத்துக்கு வந்து கேட்டபோதுதான் உலக வழக்கம்போல் அவருக்குக்