பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

413

சங்கட நிலை

அக்காலத்திற் கும்பகோணத்துக்கு இருப்புப்பாதை ஏற்படாமையால் திருவாவடுதுறையிலிருந்து நான் பெரும்பாலும் கும்பகோணத்துக்கு அடிக்கடி நடந்தே செல்வேன். கிட்டத்தட்ட 12 மைல் தூரம் இருக்கும். அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துப் பேசவேண்டியவற்றைப் பேசி விஷயங்களை அறிந்து வருவேன். இரவு கும்பகோணத்தில் தங்கும்படி நேரிட்டால் எனக்கு ஆகாரம் கிடைப்பது கஷ்டமாகி விடும், தெரிந்தவர் யாரும் இல்லாமையால் எந்த வீட்டுக்கும் போவதில்லை. சாப்பாட்டு விடுதியில் போய்ச் சாப்பிடக் கையில் பணம் இராது. இந்நிலையில் எங்கேனும் தருமத்துக்குச் சாப்பாடு கிடைக்குமாவென்று விசாரிப்பேன்.

கும்பகோணம் மகாமகதீர்த்தத்தின் கீழ்பாலுள்ள அபிமுகேசுவர ஸ்வாமி கோவிலில் தேசாந்தரிகளுக்கு உணவு அளிப்பதற்கு ஒரு தர்மசாலை இருந்தது. அங்கே சென்று என் பசியைத் தீர்த்துக் கொண்டு தர்ம சாலையை ஏற்படுத்திய மகா புருஷனை மனமார வாழ்த்துவேன். சில சமயங்களில் நான் யாரைப் பார்க்கப் போவேனோ அவர் என்னோடு நெடுநேரம் பேசியிருந்துவிட்டால் தர்ம சாலையில் அகாலமாய்விடும். ஆகாரம் கிடைக்காது.

நான் போகும் இடங்களில் அங்கேயுள்ளவர்கள் எனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார்களென்று சுப்பிரமணிய தேசிகர் எண்ணியிருப்பார். நான் மடத்தில் வேண்டிய பொருள்களை எளிதிற் பெற்றுக் கொள்பவனாதலால் இத்தைய சந்தர்ப்பங்களில் எனக்கு வேண்டிய சௌகரியங்களை நானே செய்து கொள்வேனென்று நினைத்திருக்கலாம். அக்கனவான்களோ, மடத்திலிருந்து வரும் எனக்கு மடத்தாராலேயே எல்லாவித சௌகரியங்களும் அமைந்திருக்குமென்று நினைப்பார்கள். இவ்விருசாராரும் இவ்வாறு நினைப்பதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் ஒன்றையும் வெளிக்காட்டாமல் நான் கஷ்டத்துக்கு உள்ளானேன். உண்மை தெரிந்தால் இருசாராரும் மிகவும் வருத்தமுறுவார். “அவர்களே தெரிந்து கவனித்தாலன்றி நாம் தெரிவிப்பது சரியன்று” என்று எண்ணி வந்த காரியத்தைக் கவனிப்பதையே கடமையாக நான் கொண்டிருந்தேன்.

புதிய பண்டிதர்

கும்பகோணம் காலேஜில் இருந்த தியாகராஜ செட்டியார் 1-8-1876 முதல் ஆறு மாதங்கள் ரஜா எடுத்துக் கொண்டார்.