பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடும் பணி

475

சொல்லிப் பொருள் கூறினார். எல்லாம் மிக்க சுவையுள்ளனவாக இருந்தன. ஒரு சுலோகத்தைச் சொல்லிவிட்டு, “போஜ மகாராஜ, உன்னை எல்லோரும் கொடையிற் சிறந்தவனென்று கூறுவதற்கு என்ன காரணம்? பர நாரியர்களுக்கு உன் மார்பையும் பகைவர்களுக்கு உன் முதுகையும் ஈய மாட்டாய்” என்று அதன் கருத்தையும் சொன்னார். உடனே நான் அக் கருத்தை ஒரு கட்டளைக் கலித்துறையில் அமைத்துச் சொன்னேன். அது வருமாறு:—

“கொடையிற் சிறந்தனை யென்றுனை யாவருங் கூறலென்னே
நடையிற் சிறந்த பரநா ரியரொடு நண்ணலர்க
ளிடையிற் சிறந்தமை முன்னொடு பின்னின்று மீந்திலைநீ
தொடையிற் சிறந்த புயபோஜ ராஜ சுகோதயனே.”

[பரநாரியர்—வேறு மகளிர். நண்ணலர்களிடையில்—பகைவர் கூட்டத்தினிடையே. சிறந்து அமை முன்னொடு—சிறந்து அமைந்த மார்போடு. பின்—முதுகு. தொடை—மாலை. பரநாரியருக்கு முன்னும், நண்ணலர்களுக்குப் பின்னும் ஈந்திலையென்று நிரனிறையாக நின்றது.]

இந்தப் பாட்டில் ‘முன்னொடு பின் இன்றும் ஈந்திலையென்ற பகுதிக்கு, மார்போடு முதுகை இன்றும் ஈயவில்லையென்ற பொருளோடு, முன்னும் பின்னும் இன்றும் ஈயவில்லை என முக்காலப் பெயரும் தோற்றும்படி வேறொரு பொருளும் அமைந்துள்ளது. அதை யறிந்து சுப்பிரமணிய தேசிகர், “நன்றாயிருக்கிறது. முன்னொடு பின் என்பவற்றோடு இன்றும் என்பதைச் சேர்த்ததுதான் ரஸம்” என்று சொல்லி மகிழ்ந்தார்.

மற்றொரு நாள் வேறு வித்துவானொருவர் வந்தபோது அவர் சில சுலோகங்களைச் சொன்னார். போஜ மகாராஜன் ஒரு நாள் வீதி வழியே செல்லும் போது எதிரே ஒரு பிராமணன் தோற்பையொன்றில் ஜலம் எடுத்து வந்தானாம். அதைக் கண்டு, “இவன் தோற்பையில் ஜலம் எடுப்பதற்குக் காரணமென்ன? அனாசாரமல்லவோ?” என்றெண்ணிய அரசன் உடன் வந்த மந்திரியைக் கண்டு விஷயத்தை விசாரிக்கச் செய்தான். போஜராஜனுடைய பார்வையினால் கவித்துவ சக்தியைப் பெற்ற அப்பிராமணன் உடனே அரசனை நோக்கி விடையாக ஒரு சுலோகத்தைச் சொன்னானாம். “போஜ ராஜனே! நீ உன் பகைவரைச் சிறைப்படுத்தி அவர் காலில் விலங்கிடுவதால் இந்நாட்டில் உள்ள இரும்பெல்லாம் செலவாயின. உன்பால் வந்த வித்துவான்கள் முதலியவர்களுக்குத் தானங்கள் வழங்கி அவற்றைக் குறிக்கும் தானசாஸனங்களைத் தாமிரப் பட்டயத்தில் பொறித்துக் கொடுக்கவே தாமிரமும் இலதாயிற்று. நான் வேறு எந்தப்-