பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552

என் சரித்திரம்

எனக்குக் காட்டி அவர் விரும்பிய நூற் பிரதிகள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்க்கச் சொன்னார். தாமோதரம் பிள்ளை இறையனாரகப் பொருளுரை கேட்டிருந்தார். அதில் 59-ஆவது சூத்திரத்தின் உரையின் பிற்பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றும் கிடைத்தால் அனுப்பவேண்டுமென்றும் எழுதினார். மடத்திலே தேடிப்பார்த்தபோது இறையனாரகப் பொருளுரையின் பழைய பிரதி ஒன்று அகப்பட்டது. அதில் அந்தச் சூத்திரவுரை முற்றும் இருந்தது. உடனே அந்தப் பிரதியைத் தாமோதரம் பிள்ளைக்குச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பி வைத்தார்.

முதற் கடிதம்

தேசிகர் அனுப்புவித்த ஏட்டுப் பிரதி வரும் விஷயத்தைத் தெரிவித்து, “தணிகைப் புராணத்தைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டபோது மதுரை இராமசாமி பிள்ளை குறிப்பெடுத்து வைத்திருக்கிறார். அதை உபயோகித்துக் கொள்ளலாம்” என்று எழுதி அவற்றை அனுப்பச் செய்தேன். அதுவரையில் தாமோதரம் பிள்ளைக்கு நான் கடிதம் எழுதியதில்லை. என் கடிதத்தைக் கண்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று எனக்கு ஒரு பதிற்கடிதமெழுதினார். அதிற் சில பகுதிகள் வருமாறு:-

“..........அடியேன் இன்னும் சின்னாளிற் கும்பகோணம் வரும்போது தங்கள் சிநேகத்தைச் சம்பாதித்தற்கு யாரிடம் ஓர் கடிதம் பெற்று வருவேனென்று சிந்தித்துக் கொண்டிருக்கத் தேடிய தெய்வம் தானே வந்து கைப்பற்றியதென்னத் தாங்களே எனக்குக் கடிதமெழுதியதனை நினைக்க நினைக்கப் பேரானந்தத்தை விளைக்கின்றது. தாங்கள் எழுதி யருளிய கடிதம் வந்து மூன்றாநாள் ஸ்ரீ பெரிய சந்நிதானம் கட்டளையிட்டருளிய இறையனாரகப் பொருட் பிரதியும் தபால் மார்க்கமாக வந்து சேர்ந்து 59-வது சூத்திர உரையின் கடைசிப் பாகமும் கண்டு மகிழ்வுற்றேன்.

‘திருத்தணிகைப் புராணத்தின் முதலிலே ஸ்ரீலஸ்ரீ கச்சியப்ப சுவாமிகளது சரித்திரத்தைச் சுருக்கமாய் அச்சிட விரும்புகின்றேனாதலால் தாங்களாவது ஸ்ரீமத் இராமசாமி பிள்ளையாவது அச்சரித்திரத்தை விரைவில் எழுதி யனுப்பினால் அடியேன் மிக்க நன்றியறிவுள்ளவனாயிருப்பேன். யார் அதனை எழுதி யனுப்பினும் இன்னாரால் எழுதப்பட்ட தென்பதை அதிற் குறித்துக் காட்ட அடியேனுக்கு உத்தரவும் கொடுக்க வேண்டியது.

‘மேலுள்ளன வெல்லாம் தங்கள் சமூகத்தில் நேரே தெரிவித்துக் கொள்வேன்.