பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

656

என் சரித்திரம்

காலைக் கடன்களை முடித்த பிறகு நான் எழுதிய சமாதானப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு, சாது சேஷையரிடம் சென்றேன். கண்டனத்துக்கு நான் எழுதிய சமாதானத்தை வேறொருவர் படித்துப் பார்த்தால்தான் அதன் பொருத்தம் தெரியுமென்ற எண்ணத்தாலும், என்பால் பேரன்புடைய அவர் ஏதேனும் யோசனை கூறக் கூடுமென்ற கருத்தாலுமே அவரிடம் போனேன்.

சாது சேஷையர் உபதேசம்

நான் எழுதிக் கொண்டு சென்ற கடிதங்களை அவர் கையிற் கொடுத்து, “சிந்தாமணியைப் பற்றிய கண்டனங்கள் எங்கும் உலாவி வருவது உங்களுக்குத் தெரியுமே. தூஷணைகளுக்குச் சமாதானம் சொல்லுவது சாத்தியமன்று. பிழையென்று சொல்லப்பட்டவற்றிற்கு எனக்குத் தெரிந்த அளவில் சமாதானம் எழுதியிருக்கிறேன். பார்வையிட வேண்டும்” என்றேன். அவர் வாங்கிப் பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ வென்று நான் ஆவலோடு எதிர்பார்த்து நின்றேன்.

அவர் உடனே அதை அப்படியே கிழித்துப் பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் போட்டார். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கலக்கமுற்றேன். அவர் என்னைப் பார்த்து மிகவும் நயமான குரலில் சொல்லத் தொடங்கினார்: “நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் உங்களைத் தூஷித்துக் கொண்டு திரிவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்குத் தெரிந்தனவே. அப்படிச் செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா? இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம். அப்படி இருக்க, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம். இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும். உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவரகள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்கவேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்” என்று கூறினார்.