உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


வேட்டி, சில்க் ஜிப்பா, சரிகை அங்கவஸ்திரம் அணிந்து கோலாகலமாகக் காட்சியளித்தனர்!

போதாக்குறைக்கு அவர்கள் மேல் கமகமக்கும் அத்தரையும் எடுத்துப் பூசிவைத்தார் பாகவதர்.

இந்தச் சமயத்தில், "எதற்கும் புதிய டயர் ஒன்று வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது' என்று அவர்களை எச்சரித்து வைத்தார் டிரைவர்.

'சரி, நீங்கள் அந்த வேலையைப் பாருங்கள்; நாங்கள் இப்படி நடந்தே போய் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு இங்கே வந்து விடுகிறோம்” என்று டயருக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டுப் பாகவதர் தம் நண்பர்களுடன் நடந்தார்.

நாலடி எடுத்து வைத்தார்களோ இல்லையோ, பாகவதரைத் திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை யென்றும், அவருடன் சென்றவர்களை அவருடைய கோஷ்டியினர் என்றும் நினைத்துக்கொண்டு விட்ட ஒரு ரசிகர் கூட்டம் 'இன்று எந்த ஊரில் மேளம், இன்று எந்த ஊரில் மேளம்?' என்று வாய் ஓயாமல் கேட்டுக்கொண்டே அவர்களைத் தொடர்ந்தது.

பாகவதர் மறுத்துப் பார்த்தார்; ரசிகர்கள் கேட்க வில்லை. 'எங்களையா ஏமாற்றப்பார்க்கிறீர்கள்?' என்று படுசமர்த்தாகச் சிரித்துக்கொண்டே அவர்களைத் தொடர்ந்தார்கள்.

'இது அவர்கள் தவறும் இல்லை. இந்த சரிகை வேட்டி, துண்டுகள் செய்யும் வேலை!" என்று நினைத்த பாகவதர், சரி, நாமும் தான் இவர்களுக்காகக் கொஞ்சநேரம் இராஜரத்தினம் பிள்ளையாகவும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை யாகவும் நடித்துப் பார்ப்போமே? என்று துணிந்து, 'ஏது, என்னதான் மறைத்தாலும் நீங்கள் எங்களை விட மாட்டீர்கள் போல் இருக்கிறதே? இன்றிரவு கோயமுத்துாரில் மேளம்'என்று சொல்லி வைத்தார்.