இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42
3
கல்லூரி மணிக்கு முன்னர்
வெளியினில் காத்தி ருக்கும்
செல்வங்கள் தமிழர் தந்த
திருநாட்டு மணிகள் போல
வல்லிருள் குலைக்கும் உன்றன்
வழிபார்த்து மீனி னங்கள்
நல்வர வேற்ப ளிக்கும்!
நற்றமிழ் நிலவே ! வாழி !
4
உயர்வுதாழ் வெண்ணும் மக்கள்
உருப்பெறார் ! உன்னிற் கண்டேன் !
அயர்ந்திடு போதும், இன்ப
அலையிடைப் பட்ட போழ்தும்
அயர்வுதாழ் வற்று நீயுன்
ஒளிப்பாலை ஊட்டு கின்றாய் !
அயலவர் உயர்வுப் பேச்சை
அடக்குதல் உனது நோக்காம் !
5
சேவலோ சிறக டித்துக்
கூவிடச் சிட்டுப் பாடப்
பூவினம் தேடி வண்டு
புதுயாழை மீட்டத் துள்ளித்
தாவியே கிழக்கில் வெள்ளி
தலைநீட்ட உனது நெஞ்சில்
மேவிய துயர மென்ன ?
ஏன்முகம் வெளுத்து நின்றாய் ?