சு. சமுத்திரம்
153
அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை நான் ஏற்படுத்தியிருக்கேன் பாரு... இதுக்காக எனக்கு நானே தண்டனை வழங்குறது மாதிரி பிரியுறேன்.”
“ஸாரி... செல்வா. சும்மா ஜோக்காத்தான் சொன்னேன். விலகிப் விலகிப் போன உங்களை வளைத்துப் போட்டது நான்தான். உங்க வீட்டு வேலைக்காரம்மா நீங்க படுற பாட்டை சொன்னபோது நிசமாவே அழுதுட்டேன். பெண்களை மானபங்கபடுத்துற இந்தக் காலத்துல, நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்னு அந்தம்மா சொன்னாங்க... காலேஜ்ல நல்லா பேசி மெடல் மெடலாய் வாங்கியிருக்கீங்கன்னு வேலைக்காரம்மா சொன்னாங்க... அதனால் ஒங்க மூஞ்சு முகரக் கட்டைக்காக நான் உங்களை காதலிக்கல... உங்க டேலண்டுக்காகவும் நல்ல குணத்துக்காகவும்தான் காதலிக்கிறேன்.”
“எங்க சித்தப்பா மகன் ஐ.ஏ.எஸ். டிரெயினிங் போயிருந்தான். அவன்கிட்ட ஒரு வங்காளப் பொண்ணு... ஒரு ஒரிசா பொண்ணு... காஷ்மீரி பொண்ணு இவங்களும் ஐ.ஏ.எஸ். தான். இவன்கிட்ட ஒவ்வொருத்தரும் என்னை கட்டிக்கிறீங்களான்னு கேட்டிருக்காங்க... உடனே இவன் நானோ கருப்பிலேயோ கருப்பு அண்டங் கருப்பு... மொழியும் மதமும் வேற வேற... நான் ஒரு புத்தகப் புழு... என்ன ஏன் விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு, அவளுக ஒவ்வொருத்தியும் என் கணவருக்கு அழகு முக்கியமில்ல. ஆரோக்கியமான உடம்பு முக்கியம். எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்கக்கூடாது. பெண்களை மதிக்கத் தெரியணும்... அதனால நீங்க எனக்கு கணவரா வந்தா சந்தோஷப்படுவேன்னு, சொல்லியிருக்காங்க... அதாவது இந்தக் காலத்து பெரிய பதவி பெண்களுக்கு, கணவன் என்கிறவன், அவளை மதிக்கத் தெரிந்தவனாகவும், நல்லவனாகவும், தோழனாகவும் இருக்கணும்...”
“உங்க சித்தப்பா மகன் என்ன செய்தான்?”
“அந்தப் பெண்களை உதறிட்டு, நான் உங்கள காதலிக்கிறது மாதிரி ஒரு தொட்டாச்சிணுங்கி பொண்ண காதலிக்கிறான். முகம் போற போக்க பாரு... உங்களுக்கு சென்ஸ் ஆப் ஹுமரே இல்ல... சரி போகட்டும். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்கிறதை நிரூபிக்கிறதுக்கு, நானே ஒரு லவ் லெட்டர் எழுதி உங்களுக்குத் தரப் போறேன்.”
“எழுது. எழுதாமல் போ. நான்தான் முதல்ல எழுதுவேன்.”
“ஒங்க மேல இருக்கிற நம்பிக்கையை நிரூபிக்கிறதுக்காக இதுவரைக்கும் போகாத சீரணி அரங்கத்திற்குப் பின் பக்கம் போவோமா? இன்னிக்கு உங்களுக்கு அதிக சலுகை...”