22
ஒத்தை வீடு
“இப்போ மட்டும் ஒங்களுக்கு என்ன குறை... இருக்கிறதை வைச்சே நீங்க திருப்திப்படலாம். அய்யய்யோ... வெந்நீர் ஆறிடும்... ஒங்களைத்தான் எழுந்திருங்க...”
மனோகர் எழுந்தான்... அவன் உள்ளே போனாலும், தான் வெளியே போகப் போவதில்லை என்பது போல், இந்திரன் நாற்காலியில் கைகளை விரித்துப் போட்டான். இதற்குள், வெளியே தெருவில் சத்தம். சொர்ணம்மாவுக்கும், பத்து பாத்திரம் தேய்க்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுக்கும் வாயத் தகராறு. ஒடிந்து விழுவது போல் மார்பற்றுப் போன அந்தப் பெண், போராளியாய் பேசினாள்... அந்த வீட்டு காம்பவுண்டு சுவருக்கு வெளியே எட்டிப் பார்த்த செவ்வரளி கிளைகளைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்.
“அதோ... அதுல நேத்து ரெண்டு பூ பறிச்சது நிசந்தான்... நீ சத்தம் போட்டதும், ஒன் கிட்டயே அந்தப் பூவைப் போடலியா... ஆனா, இன்னிக்கு சாமி சத்தியமா நானு பூப்பறிக்கல...”
“சரியான புழுகிணிடி... அதெப்படி... நேற்று ரெண்டு பூ இருந்த இடத்துல இன்னைக்கு இல்லை...? சொல்லு... பதில் சொல்லுடி...”
“சரியான மாங்காய் மண்டையாய் இருக்கியே... பூத்த இடத்துலேயே பூக்கணுமுன்னு சட்டமா...”
“யாருடி மாங்கா மண்டை...? பன்னாடைப் பயமவளே... பல்லை... உடைப்பேன்... இன்னொரு தடவை சொல்லுடி பார்க்கலாம்...”
"மாங்காமண்டை மாங்கா மண்டை"
மனோகருக்குக் கோபம் வந்தது. இந்திரனுக்குச் சிரிப்பு வந்தது. கோபக்காரன், குரோதமாய்க் கேட்டான்...
“இந்தா பாரும்மா. மரியாதையா போயிடு... வம்புச் சண்டைக்கு வந்தே, போலீஸ்ல ஒப்படைக்க வேண்டியது வரும்...”
“சரியான எட்டன் நீ... போலீஸ்ல ஒரு வாரம் வச்சிருப்பான்... அங்கேயே குடித்தனம் செய்யவா விடுவான்? ஒனக்கெல்லாம் இம்மாம் பெரிய உடம்பு எதுக்குய்யா? அம்மாக்காரிய அடக்குறதுக்கு வக்கில்ல... வந்துட்ட பெரிசா... தல காஞ்சவங்கள்னா இளக்காரமா...? எனக்கும் செட்டு இருக்குய்யா...”
“அடியே... செருப்பால அடிப்பேண்டி...”
“பாத்தியா... அந்த தத்தேறிப் பேசுற பேச்சை... சின்னப் பிள்ளாண்டான் மாதிரி நிற்கிறே... அந்தக் கஸ்மாலக் கெய்வியை தள்ளிட்டுப் போய்யா...”