சு. சமுத்திரம்
23
மனோகரின் உதடுகள் துடித்தன. கண்கள் எரிந்தன... கைகள் துடித்தன... ஆனால் கால்கள் அந்தப் பெண்ணை நோக்கி நகர மறுத்தன. நல்ல வேளையாக காந்தாமணி ஓடி வந்து அம்மாவை, மாட்டை இழுப்பது போல் இழுத்துக்கொண்டு போனாள். சங்கரி, கணவனின் கையை பிடித்து இழுத்தபடியே, எரிச்சலாய்ப் பார்த்த அந்தப் பத்துப் பாத்திரத்தை, தங்கப் பாத்திரத்தைப் பார்ப்பது போல் பார்த்து, ‘பேசினது தப்புத் தான்... நீ போம்மா...’ என்று கெஞ்சினாள். ‘அப்படி சொல்லு மவராசி...’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குதிபோட்டு நடந்தாள்...
வீட்டுக்குள் கோபமாய்க் காலடி வைத்த மனோகர், தூக்குபையை, காலால் இடறியபடியே மாடிக்குப் போனான். காந்தாமணியும் சங்கரியும் சமையலறைக்கு வந்தார்கள். சொர்ணம்மா, அங்கேயும் வந்து ஆடினாள்.
“அடியே காந்தாமணி... எனக்குன்னு இப்படி ஒரு மருமகள் வாய்த்திருக்காள் பாரு... அவள் தலையை இழுத்து... யாருடி மாங்கா மண்டைன்னு ரெண்டு கேள்வி கேட்டு, நாலு சாத்துச் சாத்தாம, எதிரிகிட்ட தோப்புக் கரணம் போடுறாள் பாரு...”
“தப்புத்தாம்மா... நாளைக்கு வட்டியும் மொதலுமாத் திட்டுவாள்... நீ பிள்ளையாருக்கு விளக்கேத்திட்டு வா..”
அம்மா போனதும், கேஸைப் பொருத்திய காந்தாமணி கீழே குனிந்து, நாத்தனார் கையில் இருந்த சப்பாத்திக் கட்டையை பறித்தபடியே கூறினாள்...
“நீ... மாடிக்கு போயேன்... நான் சமையல் வேலையைப் பார்த்துக்கிறேன்...”
“வேண்டாண்ணி... அப்புறமாய்ப் போறேன்... அவரு பசியோட இருப்பாரு...”
“அதனாலதான் போகச் சொல்றேன்... ஒரு மாதப் பசி பாரு...”
காந்தாமணி, சங்கரியைப் பார்த்து கண்களைச் சிமிட்டினாள்... அவளோ, தலையைத் தாழ்த்திக் கொண்டு, சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்தாள். இதற்குள் மாடிக்கு போன மனோகர், வேடம் கலைத்து, லுங்கி பனியனோடு சமையல் அறைக்குள் வந்தான். அக்காவை அங்கே எதிர் பாராதது போல், ஆள்காட்டி விரலை வாயால் கடித்தான். காந்தாமணி, தம்பியையும் சங்கரியையும் மாறி மாறிப் பார்த்துப் பூரித்துப் போனாள்... ஆயிரம் பெண்களை ஒதுக்கி, ஆயிரத்தில் ஒருத்தியாக இந்த சங்கரியை தம்பிக்குத் துணையாக்கியவள் இவள்தான். ‘இந்த ஜோடிக்கு எதிராக எந்த