சு. சமுத்திரம்
33
சங்கரி தட்டுத் தடுமாறி பேசப் போகிறாள். மெல்ல மெல்ல நாக்கு, விமானம் போல் நகர்கிறது. பிறகு ஆகாயப் பாய்ச்சலாய் பாய்கிறது. நெடுநாள் பழகிய ஒரு தோழியிடம் பேசுவது போன்ற வேட்கை. பேசுகிறாள்... அவன் தலையைக் கோதிவிட கோதிவிட, பேசிக்கொண்டே போகிறாள். பெண் பார்க்க வந்தபோதே, அவனைப் பிடித்து விட்டதாம். கல்லூரிக் காலத்தில், தனக்கு வருகிறவன், எப்படி வர வேண்டும் என்று கற்பனை செய்தாளோ... அப்படியே இருக்கிறானாம். இவன்தான், அவனின் நகலாம்; இல்லை இல்லை இவனே அசலாம்... அவனைப் பார்த்த நாலில் இருந்து, சர்வீஸ் கமிஷன் பரிட்சைக்குப் படிக்க முடியலியாம்... பெயிலாகி விடுவாளாம்... ஆனாலும் கல்யாணப் பரீட்சையில் பாஸாகியதில் மகிழ்ச்சியாம்... கல்லூரித் தோழிகள், ‘உன் நல்ல குணத்துக்கு ஒரு நல்ல ஜென்டில் - மேன்தான் கணவனாய் வருவான்.’ என்று கணித்ததுபோல் கிடைத்து விட்டானாம். ஆனாலும், தோழிகளிடம் ஜென்டில்மேனுக்கு விளக்கம் கேட்டு குறுக்குக் கேள்விகளைப் போட்டாளாம்...
‘அந்த ஜென்டில்மேன் என்ற வார்த்தையின் பொருளென்ன... கணவனா... நல்லாயில்லே... மாண்புமிகுவா... மதிப்புக்குரியவனா... அதிர்ந்து பேசாதவனா... அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறவனா... அக்கடா என்று கண்டுக்காதவனா... ஏக பத்தினி விரதனா... சூதுவாது இல்லாத சுத்தச் சுயப் பிரகாசியா... எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளடங்கி இருப்பவனா... குட் பெல்லோவா... அல்லது குட் பார் நத்திங் பெல்லோவா...’ ‘ஒரு கணவன், மனைவியிடம் ஜென்டில்மேனாய் நடக்கப்படாது... மனைவியோட முடியைப் பிடித்து இழுக்கணும். காதைத் பிடித்து திருகணும். இதெல்லாம், பிறத்தியார்கிட்டே செய்தால், ஜென்டில்மேன் செயலில்லை. இதே மாதிரி; மனைவிகிட்டேயும் செய்யாமல் ஜென்டில்மேனாக இருந்தால், அந்த கணவன் என்ன ரகம்?’ என்று ஒருத்தி பேசியதை பாதியில் நிறுத்திவிட்டு, குறும்பாய் பார்க்கிறாள்.
சங்கரி, பின்நோக்கிய சிந்தனையை நிறுத்தி விடுகிறாள். பின்னர் சிறிது இடைவெளி கொடுத்து, மிச்சம் மீதியை நினைத்துப் பார்க்கிறாள். அப்போது மனதில் தோன்றிய சிரிப்பு, அவளைப் பார்த்து, இப்போது சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கிறது. குண்டுச் சட்டிக்குள் குதிரையை விட்டதுபோல், அந்தப் பால்கனிக்குள் வட்டமிட வைக்கிறது.
மனம், மீண்டும், பின்னோக்கி பாய்கிறது.
மனோகர், அவளைப் படுக்கையில் சாய்க்கிறான்... அவள் விளக்கு விளக்கு என்கிறாள். அவன் எழுந்து போய் விளக்கை