குமரி நாடு—புறச் சான்றுகள்
௫௩
ஆப்பிரிக்க மரங்கள், இந்திய தீவக்குறை (Peninsula)யின் தென்கோடியில் அயல் நாட்டு வணிகம் நிகழ்ந்துவந்த சில துறையகங்களில், அதாவது குமரிமுனையருகிலுள்ள கோட் டாற்றிலும் திருநெல்வேலிக் கோட்டகை (ஜில்லா)யில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கை யிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னும் காணப்படுகின்றன என்று கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார்.
தேக்கு பர்மாவிலும், தென்னிந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும்; புளி சாவகத்திலும் இந்தியாவிலும்; தென்னை இந்தியாவிலும் இலங்கையிலும் மேலனீசியத்(Melanesia)த் தீவுகளிலும்; நெல் பர்மாவிலும் இந்தியாவிலும் சீனத்திலும் ஜப்பானிலும் சாவகத்திலும்; கரும்பு சீனத்திலும் ஜாவாவிலும் இந்தியாவிலும் தொன்றுதொட்டு வளர்கின்றன.
கோளரி (சிங்கம்) இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும்; காண்டாமா மலேயாவிலும் ஆப்பிரிக்காவிலும்; யானை பர்மா விலும் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன.
“பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூர” [1]
“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூரன்” [2]
என்னுங் குறிப்புகளால் பண்டைத் தமிழ்நாட்டில் நீர்நாய் என்றோர் உயிரியிருந்தமை யறியப்படும். அரிப்பான் (Rodent) இனத்தைச் சேர்ந்த நீர்நாய் (Beaver), நீர்வாழி (Aquatic), இருவாழி(Amphibious) என இருவகை. இவற்றுள், முன்னதை எலியென்றும், தென்கண்டத்திலும் (Australia) தாஸ்மேனியா (Tasmania)விலும் வாழ்வதென்றும், வெப்ஸ்ற்றர் தமது புதுப் பன்னாட்டுப் பொதுவகராதி (New International Dictionary) யில்[3] குறிப்பிடுகின்றார். தமிழில் நீர்நாயைப் பற்றிய குறிப்பு களிலெல்லாம் அது மருதநிலத்து நீர்வாழியாகக் கூறப்பட்டி ருப்பதினால் தமிழ்நாட்டு நீர்நாய் தென்கண்டத்திலுள்ள நீரெலிக்கு (beaver rat) இனமானதாகத் தெரிகின்றது.
அன்னத்தில், வெள்ளையன்னம் காரன்னம் என இரு வகையுண்டு. இவ்விருவகையும் தமிழ்நாட்டிலிருந்தமை,