பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௯௦

ஒப்பியன் மொழிநூல்

நெறிதிறம்பிய காமம் ஒரு பெண்ணுக்கு எவ்வகையிலேனும் தீமை செய்யாவிடத்துக் கைக்கிளையாம்; தீமை செய்தவிடத்துப் பெருந்திணையாம். காமஞ்சாலாத ஒரு சிறு பிள்ளையோடு பேசிமட்டும் இன்புறுவது கைக்கிளை; வரம்பு கடப்பின் பெருந்திணை. இன்பநெறிக்கு மாறாக விலங்குத் தன்மையும் பேய்த்தன்மையுமான கூட்டமெல்லாம் பெருந் திணையே. கொடிய குட்டநோய் பெருநோய் எனப்பட்டது போல, கொடியமணக் கூட்டம் பெருந்திணையென்னப்பட்டது. இதையறியாமல், எண்வகை மணங்களில் நால்மணம் பெற்றதால் பெருந்திணை யெனப்பட்டது என்று கூறினர் நச்சினார்க்கினியர். மேலும், பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்மணங்களும் பெருந்திணையாகாமையு மறிக.

பண்டைக்காலத்தில், களவின் தொடர்ச்சியாகவே கற்பு நிகழ்ந்துவந்தது. இதுபோது, பெரும்பாலும் பெற்றோராலேயே புணர்க்கப்படும் மணங்களுள், பெண் மாப்பிள்ளை என்னும் இருவர்க்குள்ளும், ஒருவர்க்கே அன்பிருப்பின், கைக்கிளையின் பாற்படும்; இருவர்க்கும் அன்பிருப்பின் அன்பின் ஐந்திணையாம்; இருவர்க்கும் அன்பில்லாதிருப்பின் பெருந்திணையின் பாற்படும்.

அகத்தியர் காலம்

இனி, “அவரும் (அகத்தியர்) தென்றிசைக்கட் போது கின்றவர்.... துவராபதிப் போந்து, நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடிவேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கண்ணிருந்து” என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்ததிகாரவுரையிற் கூறியிருப்பதின் பொருளையுணராது. அகத்தியரைக் கண்ண னுக்குப் பிற்பட்டவரென்று கூறுகின்றனர் சிலர்.

நச்சினார்க்கினியர் கூற்றில், துவரை என்றது மைசூரைச் சார்ந்த துவாரசமுத்திரத்தை. நிலங்கடந்த நெடுமுடியண்ணல் என்றது குறள் (வாமனத்) தோற்றரவு(அவதார)த் திருமாலை. இதுவரை நிகழ்ந்துள்ள திருமாலின் ஒன்பது தோற்றரவுகளுள், குறள் ஐந்தாவதென்பதையும் இரகுராமன் ஏழாவதென்பதையும், கண்ணன் கடையனென்பதையும் அவர் மறந்தனர்போலும்! இரகுராமர் காலத்தவரான அகத்தியர் கண்ணனுக்குப் பிற்பட்டவராதல் எங்ஙனம்?