பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௪௬

அக்கிரம் = நுனி, முதல், தலைமை. “அகர மாயிரம் அந்தணர்க் கீயிலென்” என்றார் திருமூலர்.

E. acre, A.S. aceer, Ger. acker, Gr. agros, L. ager Sans. ajra.

கல் = தோண்டு. கல் + வி = கல்வி. கல்வி என்னும் பெயர் முதலாவது தோண்டுதல் என்னும் பொருளில் உழவைக் குறித்தது. பின்பு, நூற்கல்விக்குச் சிறப்புப் பெயராயிற்று. மாந்தன் முதன்முதற் கற்ற கல்வி உழவே. கல் - colo, to till.

தொழில் என்னும் பெயரும் முதலாவது உழவையே குறித்தது. தொள் + இல் = தொளில் — தொழில்.

ஒ.நோ : பொள் + இல் = பொளில் — பொழில். பொள் — பொளி. பொளித்தல் வெட்டுதல். (பொள் - பொழ்) பொள்ள (வெட்ட)ப்படுவது பொழில். பொழில் = சோலை. பண்டைத் தமிழகம் முழுவதும் பெருஞ்சோலையாய் அல்லது காடாயி ருந்தது. காடுவெட்டி நாடாக்கப்பட்டது. அகத்தியர் காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்தமை நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க.

தமிழகம் முழுதும் ஒரு பெருஞ்சோலையாயிருந்ததினாலேயே பொழில் என்னும் பெயர் உலகம் அல்லது நாடு என்று பொருள் படுவதாயிற்று. 'நாவலந் தண்பொழில்' 'வண்புகழ் மூவர் தண் பொழில்', 'ஏழ்பொழில்' என்னும் வழக்குகளை நோக்குக.

தொள் = தோண்டு. தொள் — தொடு = தோண்டு. தொள்- till, to cultivate. தொள்ளுவது தொழில்.

மாந்தன் முதலாவது செய்த பெருந்தொழில் உழவே. உழவின் பெயரான தொழில் என்பது, பிற்காலத்தில் எல்லாத் தொழில்கட்கும் பொதுப்பெயராயிற்று.

செய் = வயல். செய்வது செய். நன்செய், புன்செய் என்னும் பெயர்களை நோக்குக. செய்கை = வயல்வேலை. பண் = செய். பண்ணுவது பண்ணை. பண்ணை = வயல்.

முதலாவது கையினாற் செய்யப்பட்ட தொழில் உழவு என்னுங் கருத்துப்பற்றியே, உழவரைக் “கைசெய்தூண் மாலையவர்” என்றார் திருவள்ளுவர்.