பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௯௨

ஒப்பியன் மொழி நூல்

(3) நிலத்துமக்கள் வாழ்க்கைமுறை

நாட்டுவாழ்க்கைநிலை : இக்காலத்திற்போலச் சரித்திர நூல்கள் முற்காலத்தில் எழுதப்படாவிடினும், முதற்றமிழரின் வாழ்க்கை முறை அகப்பொருட் செய்யுட்களில், சிறப்பாகக் கோவையில், மிகக் காவலாகப் போற்றப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு நாகரிகமடையினும், அதனால் அவரது நடையுடை கொள்கை எவ்வளவு மாறினும், பண்டைமுறைபற்றியே என்றும் பாடவேண்டு மென்று கோவைக்கு ஒரு மரபுள்ளது. அது புலனெறிவழக்கம் எனப்படும். அதாவது. உள்ளதும் இல்லதுங் கலந்து இனியதாகவே யிருக்கும் நாடக முறையும், இனியதும் இன்னாததுங் கலந்து உள்ள தாகவே இருக்கும் உலகியல் முறையும் ஒருங்கே தழுவிய நூனெறி வழக்காகும்.

குறிஞ்சி நாட்டரசன் மகளுக்கு உடையும் அணியும் தழையாகவே கோவையிற் கூறியிருப்பது, மிகப் பழங்காலத்து இயல்பைக் குறிப்பதாகும். இக்காலத்திற் கராச்சிப் பட்டணியும் ஒரு பெண்ணைக்குறித்துக் கோவை பாடினும், பண்டைத் தழையே தலைவன் கையுறையாகக் கூறப்படுவதன்றிக் கராச்சிப்பட்டு கூறப்படாது. இங்கனமே பிறவும்.

பண்டைத் தமிழர் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற் பெயர் பெற்றன (இடவனாகு பெயர்.) இவற்றின் பெயர்களுள், பாலை மருதம் என்னும் இரண்டும் மரப்பெயர்கள், ஏனைய பூப்பெயர்கள்.

பாலை எனபது பிறநாட்டிலுள்ளது போன்ற வறண்ட மணல் நிலமன்று, குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது, அது முதுவேனிற் காலத்தில் வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும்.

“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
றானலத் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய குறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”

என்று இளங்கோவடிகள் (சிலப். 11: 12—16) கூறுதல் காண்க. பாலையின் முதுவேனிற்கால நிலையே, பிரிவிற்தரித்தாக அகப்பொருட் செய்யுட்களிற்௷ கூறப்படும்.