பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம்

௨௫௩


அவை நீக்குதற்குமென உணர்க" என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.

தமிழிலக்கணத் தோற்றம்

எழுத்து :

எழுத்துக்களில் முதலாவது நெடிலும் பின்பு குறிலும் தோன்றின. முதற்றமிழர் குழந்தையர் போன்றனர், குழந்தைகள் வாயில் நெடிலே முன் பிறக்கும், குறிலினும் நெடிலே ஒலித்தற்கெளிது. நெடிலுங் குறிலும் ஒலியில் வெவ்வேறல்ல; அளவிலேயே வெவ்வேறாகும். நெடில் குறுகிக் குறிலாயிற்றென்க.

சுட்டும் வினாவும் முதலாவது நெடிலாகவே இருந்தன. இதை,

“நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி” (மொழி. 10.) “குற்றெழுத் தைந்தும் மொழி நிறை பிலவே" (மொழி. 11.) “ஆ-ஏ-ஓ அம் மூன்றும் வினா" (நூல். 32) "நீட வருதல் செய்யுளுள் உரித்தே” (உயீர். 6.)

என்று தொல்காப்பியர் கூறுவதாலும், பிற திராவிடமொழிகளில் நெடில்கள் இன்றும் உலக வழக்கில் வழங்குவதாலும் அறியப்படும்.

ஐ, ஒள இரண்டே தமிழில் புணரொலிகள் (Diphthongs). தமிழில் அரிவரி தோன்றினபோது, ஏகார ஓகாரங்கட்குக் குறிகளமைத்திருக்கவில்லை. பிற்காலத்தில் தான் அவை தோன்றின. அப்போது அவற்றின் மேலும் அவையேறின மெய்யெழுத்துக்களின் மேலும் புள்ளியிட்டனர். கற்காலத்தில் புள்ளிக்குப் பதிலாக, உயிரெழுத்துக்கரில் கீழிழுப்பு கீழ்ச் சுழிகளும், உயிர் மெய்யெழுத்துக் கொம்புகளில் மேற்சுழிகளும் இடப்பட்டன.

ஆய்தம் இத்தாலிய ஹகரம் போன்ற மெல்லிய ககரம்.