பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

15

ஆரியருள், பிராமணர் என்பார் ஒரு குலத்தார்; தமிழருள், அந்தணர் என்பார் ஒரு வகுப்பார்; அதாவது பல குலத்தினின்றும் தோன்றிய சித்தரும், முனிவரும் யோகியருமான பல்வகைத் துறவிகள்.

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”

என்று திருவள்ளுவர் 'நீத்தார் பெருமை'யிற் கூறியிருத்தல் காண்க.

ஆரியருள், க்ஷத்திரியர் என்பார் சீக்கியரும் கூர்க்கரும் போன்ற மறக் குலத்தாரும் அரசரும் ; தமிழருள், அரசர் என்பார் அரசப் பதவியினர் ; அதாவது, சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரும் அவர்க்குக் கீழ்ப்பட்ட பாரி காரி போன்ற சிற்றரசரும்.

ஒவ்வொரு நாட்டிலும் அங்கங்குள்ள குலத்தலைவரே அரசராவர்; அரசரென்று ஒரு தனிக்குலம் இல்லை.

ஆரியருள், வைசியர் என்பார் வணிகம், உழவு ஆகிய இரு தொழிலும் செய்பவர்; தமிழருள், வணிகர் என்பார் வணிகம் ஒன்றே செய்பவர்.

ஆரியருள், சூத்திரர் என்பார் பலவகையிலும் பிறருக்குத் தொண்டுசெய்பவரும், பூணூல், வேதக்கல்வி முதலியவற்றிற்கு உரிமையில்லாதவருமான கீழ்மக்கள்; தமிழருள், வேளாளர் என்பார் உழுதும், உழுவித்தும் இருவகையில் உழவுத்தொழில் ஒன்றே செய்பவரும் எல்லாவுரிமையுமுடையவருமான மேன் மக்கள்:

ஆரியப் பாகுபாட்டில் நாற்பிரிவும் குலமாகும்; தமிழப் பாகுபாட்டில் வணிகர், வேளாளர் என்னும் இரு பிரிவே குலமாகும். அவற்றுள்ளும், வணிகக்குலம் வேளாண் குலத்தினின்றே தோன்றியதாகும். இது பின்னர் விளக்கப்படும். ஆரியச் சூத்திரரும் தமிழவேளாளரும் தம்முள் நேர்மாறானவர் என்பதைமட்டும் நினைவில் இருத்த வேண்டும்.

தமிழருக்கும் சூத்திரர் என்னும் பேருக்கும் எள்ளளவும் இயைபில்லை. ஆயினும், ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின், தமிழர் இங்ஙனம் தாழ்த்திக் கூறப்பட்டனர்.

(2) வாழ்க்கை நிலை (ஆச்சிரமம்) : ஆரிய வாழ்க்கை பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என