பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியர் வருகை

21

ளாயிருந்தவை மதங்களாக வளர்வதும் நகர நாகரிகமாகும். நகரத்தில்தான் நாகரிகம் சிறப்பாய்த் தோன்றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகர் என்பதினின்றும் பிறந்ததே. (நகர் — நகரகம் — நகரிகம் — நாகரிகம்). ஆங்கிலத்திலும் இங்ஙனமே (Civilise, from civitas (L) = city).

ஆரியர்கள் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டும், ஆவை (பசுவை)த் தங்களுக்குச் சிறந்த சார்பாகக் கொண்டும், இந்திரன், வருணன் முதலிய சிறு தெய்வங்களுக்குப் பல விலங்குகளைப் பலியிட்டுக்கொண்டும், அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டும், உழவுத்தொழிலைச் சிறு பான்மையே செய்துகொண்டும், மாடு பன்றி முதலியவற்றின் இறைச்சியை உண்டுகொண்டும் இருந்ததே, ஆரிய வேதங்களினின்றும் தரும நூல்களினின்றும் அறிகின்றோம்.

தோல்மேலாடையும், நாரினாலும் ஆட்டு மயிராலும் ஆன அரையாடையும், புல்லினாற் பின்னிய அரைஞாணும், வில்வம் முள்முருங்கை முதலிய முல்லை மரங்களில் வெட்டிய ஊன்று கோலும் ஆரிய முதல் மூவரணத்தாருக்கு மனு விதித்திருப்பதும் மேற்கூறியதை வற்புறுத்தும்.

ஆரியர் இந்தியாவிற்குள் நுழையுமுன்பே, வடஇந்தியர் நல்ல நாகரிகத்தை யடைந்திருந்தார்கள். சர் ஜாண் மார்ஷல் மோஹன்ஜோ-டோரோவைப்பற்றிப் பின்வருமாறு வரைகிறார்:

“5000 ஆண்டுகட்கு முன்பு ஆரியப் பெயரையே கேள்விப்படுமுன், இந்தியாவில், மற்ற நாடுகளுமில்லாவிடினும், குறைந்தது பஞ்சாபும் சிந்தும் மிக முன்னேறியதும் இணையற்றபடி ஓரியலானதும், சமகால மெசொப்பொத்தாமிய எகிப்திய நாகரிகத்திற்கு மிக நெருங்கியதும், சிலவிடங்களில் அதினும் சிறந்ததுமான ஒரு சொந்த நாகரிகத்தை நுகர்ந்து கொண்டிருந்தனவென்று, ஒருவராயினும் ஒருசிறிதும் இது வரை நினைத்ததேயில்லை. எனினும், இதையே ஹரப்பா, மோஹன்ஜோ-டேரொ என்னுமிடத்துக் கண்டுபிடிப்புகள் ஐயமறத் தெரிவித்திருக்கின்றன. கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கும் 4000 ஆண்டுகட்கும் முற்பட்ட சிந்து மக்கள், ஆரியவுறவின் அடையாளமே யில்லாததும், நன்றாய்ப் பண்படுத்தப்பட்டதுமான ஒரு நாகரிகத்தை யடைந்திருந்ததை அவை காட்டுகின்றன. இங்ஙனமே, அங்குள்ள தொழிற் கலையும் மதமும் சிந்துப் பள்ளத்தாக்கிற்கே யுரியவும் தனிப்பட்ட தன்மையுடையனவுமாகும். அங்குள்ள சிறிய மண்ணுருப்படிகளான ஆடுகட்கும் நாய்கட்கும் பிற விலங்கு-