பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை

27

“பிராமணனுக்கு வில்வம், பலாசம் (முருக்கு) இவ்விரண்டும், க்ஷத்திரியனுக்கு ஆல், கருங்காலி இவ்விரண்டும், வைசியனுக்கு இரளி, அத்தி இவ்விரண்டும் தண்டமாக (ஊன்றுகோலாக) விதிக்கப்பட்டிருக்கின்றன” என்று மனு தருமசாத்திரத்திற் (2:45) கூறியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

(2) ஆசிரியன்

அகத்தியர், தொல்காப்பியர் முதலிய பார்ப்பனர் தமிழைக் கற்றபின் தமிழாசிரியராயினர். இதை, போப் (G.U. Pope) பெர்சிவல் (Percival) முதலிய மேனாட்டாரின் தமிழாசிரியத் தொழிலுடன் ஒப்பிடுக.

(3) பூசாரியன் (புரோகிதன்)

பார்ப்பனர் தமிழரின் மொழி, நூல், மதம், பழக்க வழக்கம் முதலியவற்றை யறிந்தபின், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்) முதலிய பழந்தனித்தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டிப் பழமைகள்[1] (புராணங்கள்) வட மொழியில் வரைந்துகொண்டு மதத்திற்கதிகாரிகளாய்ப் பூசாரித் தொழில் மேற்கொண்டனர். இதுவே அவர்கள் குலத்திற்குத் தமிழ் நாட்டிற் பெருந்தலைமையும் நல்வாழ்வும் தந்ததாகும்.

(4)அமைச்சன்

தமிழ் நாட்டில் பார்ப்பனர் ஒரோவோர் இடத்து, அருகிய வழக்காய் அமைச்சுப்பூண்டமை, மனுநீதிச்சோழன் கதையாலும் மாணிக்கவாசகர் சரித்திரத்தாலும் அறியப்படும். ஆனாலும், அது கல்வித்தகுதிபற்றி நேர்ந்ததேயன்றி, இராமச்சந்திர தீட்சிதர் தம் 'இந்திய ஆள்வினை அமைப்புகள்' (Hindu Administrative Institutions) என்னும் நூலிற் கூறியுள்ளபடி பார்ப்பனரே அமைச்சராக வேண்டும் என்னும் ஆரிய நெறி மொழி (விதி) பற்றி நேர்ந்ததன்று.

மிகப் பிந்திய விசயநகர ஆட்சியிற்கூட, அரியநாத முதலியார் போன்ற தமிழரே அமைச்சராயிருந்தனர்.


  1. 'பழமை' என்னுஞ் சொல் பழங்கதை என்னும் பொருளில், இன்றும் தென்னாட்டில் வழங்கிவருகின்றது. பழைய நிலையைக் குறிக்கப் “பழைமை” என்னும் வடிவமும், தொன்மை, முதுமை என்னும் பிற சொற்களும் உள.