உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


எதிர் பரிணாமம்



லகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான ‘எய்ட்ஸ்’ ஒழிக்கப்பட்ட காலம்… அதாவது கி.பி. 2140. அப்படியே எவருக்காவது தப்பித் தவறி, அந்த நோய் வந்தால், ஒரே ஒரு ஊசி போட்டால போதும். சம்பந்தப்பட்ட உடலில் ரத்தம் உள்ளிட்ட திரவ செல்களுக்கு கோட்டிங் கொடுக்கப்பட்டு, ஹெச்.ஐ.வி. கிருமிகள் சாகடிக்கப் பட்டு விடும். இதனால், ஆரோக்கியத்தைப் பொறுத்த மட்டில், ஒருசில தொண்டு நிறுவனங்களைத் தவிர, அனைவரையும் மகிழ்வாய் வாழச் செய்யும் மகத்தான மருத்துவப் புரட்சியின் பொற்காலம். ஆனாலும், அந்தக் காலக்கட்டத்தில்—

தமிழக மக்களை ஒரு விசித்திரமான நோய் பிடித்துக் கொண்டது. இது வரை, உலகம் கேள்விப்படாத வியாதி. கேலிக்குரிய வியாதி.ஆமாம்… தமிழர்களில் பணம் படைத்தவர்களில் பெரும்பான்மையோர் தரையில் தவழ்கிறார்கள். தரையோடு தரையாய்த் தவழ்ந்து தவழ்ந்து, பிறகு தரைக்குக் கீழேயும் போக விரும்பி, தலைகளைத் தரையில் மோதி மோதி, மூக்குகள் உடைபட்டு, முகம் சிதைந்து, சிலர்ஆபத்தான நிலையில் இருப்பதாக ஒரு செய்தி. இந்த வியாதி பெண்களை விட, ஆண்களையே அதிகமாய்த் தாக்கி இருப்பதாக ஒரு சர்வே கூறுகிறது.