பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

107

சுகாதார நிறுவனத்தின் இயக்குநரும், தென்னாப்பிரிக்கருமான டாக்டர் அந்தோணி போத்தாதலைமையில் சர்வதேச நிபுணர்கமிட்டியை அமைத்து, தமிழகத்தைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஐ.நா. ஆணையிட்டது. தன்மானமிக்க தமிழக அரசின் நிர்ப்பந்தத்தால் இந்திய அரசு ஆரம்பத்தில் இந்த கமிட்டிக்கு விசா கொடுக்க மறுத்தது. உடனே உலக வங்கிக் கடன் நிறுத்தப்படும் என்றும், பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படும் என்றும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மறைமுகமாய் எச்சரித்ததும், இந்த கமிட்டியை வரவேற்பதாக இந்தியா பகிரங்கமாய் அறிவித்தது. சிவப்புக் கம்பளம் விரித்தது. தாவரவியல், விலங்கியல், உடலியல், வேதியியல், மருந்தியல், சமூகவியல், வரலாற்றியல் போன்ற துறைகளில் அத்தாரிட்டிகளான, நிபுணர்களைக் கொண்ட இந்த ஐ.நா.சர்வதேசக் குழு, தமிழகத்தில் மலை முகடுகளைக் கொண்ட சேலம், தர்மபுரி, பெரியார், மலையான நீலகிரி, மலையே இல்லாத தஞ்சை, காய்ந்து கிடக்கும் முகவை, புதுவை, நீர் சிந்தும் நெல்லை, பொதிகைத் தென்றல் தொடும் குமரி ஆகிய மாவட்டங்களையும், அப்புறம் 'ரெண்டும் கெட்டான் சென்னை, செங்கையையும் பார்வையிட்டது. ஒரு மாத காலம் சுற்றிப் பார்த்தது. பல்வேறு பூகோள வேறுபாடுகளைக் கொண்ட இந்த மாவட்டங்களை இணைக்கும் ஒருமைப்பாடாக, தமிழர்கள் எல்லா இடங்களிலும் தவழ்வதைப் பார்த்தது. அத்தனை இடங்களிலும் தவழ்கிற கணவர்களையும், குழந்தைகளையும் பார்த்துப் பார்த்தே கூன்பட்ட நவீன நளாயினிகளான தமிழ்ப் பெண்கள், நிபுணர்களிடம் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டிருக்கிறார்கள். தவழும் பெரிய குழந்தைகள், கமிட்டியிடம் கையெடுத்துக்