பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சு.சமுத்திரம்

தங்கள் மூளையைக் கொஞ்சமும் செலவு செய்யாமல், நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்து விழுந்தே 'வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். எவர் அதிக நேரம் தன் தலைமை, தலைவரின் கால்மாட்டில் போடுகிறாரோ, அவரே வி.ஐ.பி.-க்களின் வி.வி.ஐ.பி.யாக வெற்றி மேல் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு கட்-அவுட் ஃபாஸில்களும் ஆதாரம்' மருந்தியல், மருத்துவம், பேதாலஜி எனப்படும் உணர்வியல் ஆகிய முப்பெரும் துறைகளின் முடிசூடா மன்னரும் சிங்களருமான டாக்டர் விஜயரத்னே, ஆர்க்மிடீஸ் எப்படி ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்ததும், நிர்வாணமாக அரச சபைக்கு ஓடி வந்தானோ, அப்படி பேண்ட் நழுவுவதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், ஜட்டியோடு நின்று பேசினார். கண்டுகொண்டேன் சேர்மனே... தமிழன் இப்படி ஆனதற்கான காரணத்தைக் கண்டுகொண்டேன் சேர்மனே... உயிரின உடம்பில் ஒவ்வொரு செல்லிலும் சங்கிலி மாதிரியான ஒரு கெமிக்கல் உண்டு. இதற்குப் பெயர்தான் ஜீன்... இந்த ஜீன்களில் ஒருத்தரின் மூதாதையர் சேகரித்த அத்தனை தகவல்களும் உள்ளடங்கி இருக்கும். இது ஒரு இன்ஃபர்மேஷன் சிஸ்டம். தாம் சேகரித்த தகவல்களை இவை அடுத்த தலைமுறையான வாரிசுகளிடம் கொடுக்கின்றன. இதன்படி, காலில் விழுகிறவர்கள் வெற்றி பெறும் தகவலை, இந்த ஜீன்கள் தங்களிடம் ஒரு தகவலாகச் சேர்ந்து வைத்தன. இந்த இன்ஃபர்மேஷன் வாரிசுகளுக்கும் வந்தன. இவை காலில் விழுவதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவனின் உடல்வாகை மாற்றுகின்றன. இதோ பாருங்கள், இந்தக் 'குழந்தை மனிதனின் கைகால்கள், ஓணான்கால்களாய் மாறி வருவதை... எப்படி நினைக்கிறோமோ அப்படி ஆகிறோம்.