பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

சு.சமுத்திரம்

இங்குதான்... மாமாங்கமானாலும் காத்திருக்கத் தயாரான இளைஞர்கள்... எப்படியோ மேலும் அரைமணி நேரம் அலைக்கழிந்து, கலெக்டர் வரமாட்டார் என்று போலீஸ் ஜீப் புலம்பியது... உடனே ஒரு கான்ஸ்டபிள் அருகே வந்த நேரு மைய அமைப்பாளரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, டி.ஆர்.வோ." வைத் தேடிக் கொண்டிருந்தார். எப்படியோ போட்டிகள் துவங்கிவிட்டன. பள்ளிக்கூட 'டிரில் மாஸ்டர் மாதிரி ஒரு கலை மாஸ்டர், வாயில் விசிலோடு அங்குமிங்குமாய்ப் பார்த்தார். இதற்குள் ஒரு பகுதிநேர அமைப்பாளப் பெண் ஒருத்தி, கட்டபொம்மன் தேவராட்ட குழுவைப் பற்றி எழுதியதை, வாசிக்க, விசில் சத்தம் அதை முற்றுப்புள்ளியாக்கியது... பத்து இளைஞர்கள் மைதானத்தின் நடுப்பக்கம் நளினமாய் வந்தார்கள். பஞ்சக் கச்சை வேட்டி அவர்களை நெருப்பில் நிறுத்தி, மேல்சட்டை மஞ்சள் ஒளியைக் கேடயமாய்க் கொண்டதுபோல் காட்டியது... ஒரு கையில் சலங்கை கட்டப்பட்டிருந்தது... இரு கைகளிலும் வெள்ளை சிவப்பு செண்டாத்துணிகள்... மத்தியில் நின்ற உறுமி மேளக்காரன், உறுமியை லேசாகத் தடவி, மியாவ் போட வைத்தபோது, தேவராட்டக்காரர்கள், இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது மாதிரி பம்மி நின்றார்கள்... அந்த மேளம் படபடத்து அடித்தபோது இவர்கள் புலிகளானார்கள்... சிறுத்தைபோல் ஓடியும், சிங்கம்போல் கர்ஜித்தும், முயல்போல் தாவியும், ஆமைபோல் அடங்கியும் அவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கூட்டமே ஆடியது. அடுத்து வந்தது கும்மிப் பெண்கள்... கண்டாங்கி சேலைக்காரிகள்... மண் வாசனைப் பார்வை... மதர்ப்பான தோரணை... முன்பு