பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

143

"இது ஒரே ஒரு ஊர்ல, ஒரே ஒரு ராஜா கதை இல்லங்க... இந்த மக்களோட பழக்க வழக்கங்கள், ஆட்டுக்குட்டியான அவர்களை எப்படி அரசாங்க ஒநாய்கள் வழி மறிக்கின்றன. எப்படி இவர்களது பெண்டுகள் பங்கப்படுத்தப் படுகிறார்கள்... எப்படி சமூகப் பிரக்ஞை உள்ளவர்களின் உதவியோடு இந்த மக்கள் போராடத் தயாராகிறார்கள் என்று படிப்படியாய் காட்டியிருக்கேன்... இந்த மக்களை இவர்களுக்கே அடையாளம் காட்டும் ஐந்தாறு தோழர்களில் ஒருவராக நீங்க நடிக்கிறதுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு... இப்பகூட பாருங்க. கற்பழிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்கு வசதியா இவர்கள் கண் முன்னால் வனத்துறை காவலர்களை அணிவகுப்பாய் காட்ட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், நாலுமுறை திட்டமிட்டாலும் அணிவகுப்பு நடக்கவில்லை. அணிவகுப்பு நீதிபதியின் உயிருக்கே ஆபத்து வந்திருக்கு... கற்பழிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்படுகிறார்கள். இந்த கிராமத்தை ஆட்சி செய்யும் வட்டாட்சி அலுவலகத்தில் நான் யூ.டி.சி.யாக இருந்தேன். மலை மக்களோடு நான் உறவுகொண்டிருக்கிற ஒரே காரணத்திற்காக என்னை சென்னைக்கு மாத்தியிருக்காங்க... என் கண் முன்னால நடந்த அட்டுழியங்களைத்தான் எந்தப் பாசாங்கும் இல்லாமல், எழுதியிருக்கேன். இது நாவலா... கட்டுரையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை... இந்த மாதிரி அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட நம்மோட திரைப்படம் ஒரு துவக்கமாய் இருக்க வேண்டும்"

நடிப்புப்புயல், எழுத்தாளரைப் பார்க்காமல், நாற்காலியின் பின்பக்கம் தலையை தொங்கப் போட்டார். பிறகு ரெண்டு கைகளையும் சேர்த்து சேர்த்து தட்டினார்... உதடுகளைப் பிதுக்கினார். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தபடியே, இயக்குநர் அரூபசொருபனை ஒரு மாதிரி'