பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 சு.சமுத்திரம் 0

அத்தனை சமையலாளிகளும் இப்படிச் சொன்னார்கள்.

 "அம்மா... அம்மா... தானைத் தாயே... ஞானத் தாயே!... இந்தக் கால் காயத்தோடு நாங்கள் இல்லாமல் நீ எப்படியெல்லாம் அவஸ்தைப் படப் போகிறாயோ... அதை நினைத்தால்தான் அம்மா, இந்த அற்ப உயிர் போக மறுக்கிறது... வேண்டுமானால் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மீன் குமாரை இப்போதே தீக்குளிக்கச் செய்யலாம் தாயே..."
 தலையில் பெருக்கோடிய இரத்தப் பொந்தை கைக் குட்டையால் பொத்தியபடியே வலி பொறுக்காமல் துடித்த மீன் குமார், அந்த வலியையும் மீறி உஷாரானார். அம்மாவின் கால்களில் விழுந்தபடியே, 'குய்யோ, முறையோ' என்று கூப்பாடு போட்டார்.
 "தாயே, தமிழே... உன் காலில் காயத்தை ஏற்படுத்திய இந்த அற்பன் தீக்குளிக்க சளைக்க மாட்டான். ஆனாலும் என்னை சொந்த மகனைப் போல் நேசித்த தாங்கள், நான் தீக்குளித்தால் அதைப் பொறுக்க மாட்டாது தீக்குளித் துவிடுவீர்கள் என்று தான் தயங்குகிறேன். தமிழ் தாயே..."
 அம்மாவுக்கு அப்போதுதான் உறைத்தது. சமையலாளிகளைப் பார்த்து எதுவும் செய்ய வேண்டாம் என்பதுபோல் கையசைத்துவிட்டு வாயசைத்தார்...
 "எவனும், எவளும் தீக்குளிக்க வேண்டாம்... நாம், வாழப் பிறந்தவர்கள்... ஆளப் பிறந்தவர்கள்... எல்லாம் நல்லபடியாய்த் தானே நடக்குது?"
 அந்த உதவிப் பெண் சமையலாளி அனைத்து சமையல்காரர்கள் சார்பிலும் சமர்ப்பித்தார்.