பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

() ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 169

‘'நீ இருக்கும்போது எங்களுக்கு ஏதம்மா குறை?... சாப்பிடுகிறவர்களுக்காகத்தான் சமையல் என்பதை மாற்றி, சமையலாளிகளுக்கே சாப்பாடு என்று புதுமை செய்த புரட்சியே... இந்தப் புரட்சி நீடிக்கும் வரைக்கும் எங்களுக்கு ஏதம்மா குறை...?"

 அம்மா மெல்லச் சிரித்தார். பிறகு தயாராகப் போடப் பட்டிருந்த, ஒரு ராஜாராணி நாற்காலியில் உட்கார்ந்தார்... அனைவரையும் வினயமாகவும், வினாவோடும் பார்த்தார். உடனே அத்தனை சமையலாளிகளும் தத்தம் முதுகுக்குப் பின்னால் பதுக்கி வைத்தவற்றில் முக்கால் வாசியை அம்மாவின் காலடியில் போட்ட போது, அது அம்மாவின் கழுத்தளவிற்கு உயர்ந்துவிட்டது. இதனால் அம்மா வேறுபக்கமாக உட்கார்ந்தபடியே நாற்காலியை இழுத்துப் போட்டார். உடனே அத்தனை சமையலாளிகளும் தத்தம் வேலைகளில் ஈடுபடத் துவங்கினார்கள். மீன் குமார், மீன் செதில்களை நறுக்கினார். ஒருத்தர் முந்திரிப் பருப்பை உடைத்தார். இன்னொருத்தர் வெங்காயத்தை உரித்தார். ஒருத்தர் மாவு பிசைந்தார். இந்த மாதிரியான வேலைகளை தனது தகுதிக்கு கீழாகக் கருதும் உயரமான ஒல்லி சமையல்காரர் தங்கமுலாமிட்ட சரிகை காகிதத்தால் மூடப்பட்ட தங்கத் தட்டை அம்மாவின் முன்னால் நீட்டினார். அம்மாவும், அந்த சரிகை காகிதத்தை கை நகத்தால் கிழித்தபடியே உள்ளே இருந்த ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டார். நன்றாக இருக்கிறது என்பதுபோல் கண்களைச் சிமிட்டினார். இந்தச் சமயத்தை எதிர்பார்த்திருந்த ஒரு அடாவடிச் சமையலாளி அம்மாவின் காலடியில் முகம் போட்டுவிட்டு, மரியாதைத்

தனமாக எழுந்து கை கூப்பியபடியே எல்லோருக்கும் தெரிந்த தகவலை ஒரு ரகசியம் போலச் சொன்னார்.