பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 சு.சமுத்திரம்

சாய்ந்து நின்ற வெள்ளை யூனிபாரக்காரர்கள், இவரையும், இவரை நம்பி பின்னால் வந்தவர்களையும் வாகனங்களோடு சேர்த்து ஓரம் கட்டினார்கள். அப்புறம் பழனிச்சாமியை, பக்குவமாய் பார்த்தார்கள். அவரும் பேசினார்.

"எதுக்காக...இப்படி?"

"ரெட் லைட்...கண்ணு தெரியல..."

இதற்குள் எங்கிருந்தோ ஒரு வேன்...அது அங்கே நிற்க, இந்த 'வெள்ளைக்காரர்கள்' அங்கே ஓட, அப்புறம் காதோடு வாயுரசல்...சட்டைப் பையோடு நோட்டுரசல்...பழனிச்சாமி கொதித்துப் போனார். ஒரு தடவை, செகரட்டேரியட்டில், ஏதோ ஒரு சலுகைக்கு, ஒரு 'மதராஸி' இருப்பத்தையாயிரம் ரூபாய் கொடுக்க வந்தார். இவர், அவரை போலீசில் ஒப்படைக்கப் போவதாக எச்சரித்தார்...இப்போது அந்த போலீஸே...

அந்த போக்குவரத்து வியாபாரிகள் மீண்டும் வந்ததும், பழனிச்சாமி, கொதித்துப் பேசினார்.

"நான் தப்பு செய்திருந்தால்... ஸ்பாட் பைன் போடுங்க... இல்லாவிட்டால் கேஸ் எழுதிட்டு... என்னை போக விடுங்க... நான் காசு கொடுக்கிற ஜென்மமில்ல...நாடு உருப்பட்ட மாதிரிதான்..."

பழனிச்சாமி, இப்படிச் சொல்லிவிட்டு, தன்னோடு பிணைகளான, இதர வாகனக்காரர்களை, ஆதரவாகவும், ஆதரவு கேட்பது போலவும் பார்த்தார். ஆனால், அவர்களோ, அவசர அவசரமாய், சற்று விலகிப் போய் நிற்க, அங்கே வந்த ஒரு 'போக்குவரத்திடம்' தள்ள வேண்டியதையும் தள்ளி விட்டு, வாகனங்களையும் தள்ளிக் கொண்டு போய்