பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதில் மேல் பூனை

கடல் மணிக்கு, அந்த நீதிமன்றத்தின் அனைத்துப் படிக்கட்டுகளுமாய், தானே ஆகிப்போனது மாதிரியான வேதனை. ஒவ்வொரு படிக்கட்டாய் ஏற ஏற, தன்னைத் தானே மிதித்துக் கொள்வது போன்ற துயரம்.. படிக்கட்டுகளாகிப் போன தன்னை, ஆரம்பத்தில் சித்தி மிதித்தாள். அப்புறம் பங்காளித் தம்பிகள். இலைமறைவு காய் மறைவாய் மனைவிமக்கள். இப்போது எல்லோருக்குமாய் சேர்த்து அரசாங்கம்.. எஞ்சி இருப்பது இந்த நடுவர் மன்றந்தான். மிதிக்கப்படுவோமோ.. மதிக்கப்படு வோமோ..

என்றாலும், அந்த நடுவர் மன்ற வளாகத்தைப் பார்த்தவுடனேயே, கடல் மணிக்கு ஒரு ரசனை ஏற்பட்டது. அந்த ரசனை வெள்ளத்தில் வேதனைகரைந்து போகவில்லை யானாலும், கல்லாய் மூழ்கியது. இது வழக்கமான மாஜிஸ்டிரேட் கோர்ட் மாதிரி இல்லை.. ஒங்க வக்கீல் வர்லியா ஸார்.. இன்றைக்கு நான் வேணுமுன்னா.. ஆஜராகுறேன். ஸார் என்று கெஞ்சும் கறுப்புக் கோட்டு குடுகுடுப்பைக்காரர்களை காண முடியவில்லை. காவல் துறையிடம் மாமா - மச்சான் உறவாடும் ரெளடிகளையோ, கைவிலங்கிடப்பட்ட அப்பாவிகளையோ காணமுடிய