பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சு.சமுத்திரம்

காகிதத்தில் சபாரி கையெழுத்துப் போட்டுவிட்டு, அதை செல்லையாவிடம் நீட்டப் போனார். பிறகு அது தன் தகுதிக்குக் குறைவு என்பது போல் தடியரிடம் நீட்ட, தடியர் டவாலியிடம் கொடுக்க, டவாலி அநதக் காகிதத்தைகோவில் அர்ச்சகர் குங்குமத்தைக் கொடுப்பது போல தனது கைகள் அவன் மேல் படாமல் தூக்கிப் பிடித்துக் கொடுத்தார். தடியர், இப்போது தடித்தனமான குரலில் ஆணையிட்டார். 'இது சம்மன். நாளைக்கு ஆபீஸுக்கு கணக்கு வழக்கோட வரணும்...அப்படி வராவிட்டால் கடையை மூடி சீல் வைத்துடுவோம். மறந்துடாதப்பா...நாங்க ஆபீஸில் இல்லாட்டாலும் காத்திருங்க...' சபாரிக்காரர் வழிநடத்த, அதிகாரிகள் முன்பக்கமும், டவாலி பின்பக்கமும் ஏறிக்கொண்டார்கள். ஒரு புதர்ப்பக்கம் தம்மடித்துக் கொண்டிருந்த டிரைவர் அலறியடித்து ஓடிவந்தார். அந்த ஜீப் ஒரு அரைவட்டமடித்து, வந்த வழியாய் திரும்பிப் போகத் திரும்பியது. செல்லையா, அதை வழி மறித்துக் கேட்கப் போனான். மற்ற கடைகளின் பக்கம் போகாமல், இருப்பவைகளிலேயே சின்னதான தனது கடைக்கு மட்டும் அவர்கள் ஏன் வந்தார்கள் என்று பணிவாகத்தான் வினவப் போனான்.அதற்குள் அந்த ஜீப், அவன் நின்றால் மோதப்போவது போல் பாய்ந்ததால், அவன் விலகிக் கொண்டான். மனைவி அவன் கையைப் பிடித்துக் கேட்டாள். 'என்னங்க சீல் சீல்னு பேசிட்டுப் போறாங்க..." செல்லையா, மனைவிக்குப் பதிலளிக்காமல், அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களைக் கண்களாலேயே கண்ணி