முடிவுகட்டி விடாதீர்கள்
125
அருளுணர்வும் அனைத்து நலங்களும் பெருகவேண்டும் என்பதே என் ஆசை; விழைவு.
இவ்வாறு அறுதியிட முடியாததை எப்படித்தான் காட்டுவது என்ற வினா எழுதல் இயல்பு. இன்றைய விஞ்ஞானிகள் எத்தனையோ வகையில் எண்ணிட்டும் சுட்டியும் காட்டியும் உணர முடியாத பலவற்றை உணர்த்த முயல்கின்றனர் . அவர்தம் முயற்சி வெல்வதாக என வாழ்த்துகின்றேன். இவ்வாறு சுட்டிக் காட்டும் நிலையிலும் பேரண்டப் பெருநிலையை ஓரளவாவது உணர்ந்துகொள்ள முடிகின்றது என்றாலும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அதைப் புரிய வைத்தவர்களும் நம் நாட்டில் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் ‘கண்டு விட்டோம்’ என்று முடிவுகட்டவில்லை. காண முடியாத ஒன்றாயினும் கண்ட ஓர் உவமை கொண்டு ஓரளவு காட்ட இயலும் என்றே நினைத்தார்கள். அவ்வாறு காட்ட நினைத்தவர் பலர். அவருள் இக் கட்டுரையின் தொடக்கத்துக்கு அடியெடுத்துத் தந்த மணிவாசகரையே இங்கே துணைக்கு அழைத்து அமைகின்றேன்.
மாணிக்கவாசகர் ‘திருவண்டப் பகுதி’ என்ற ஓர் அகவல் பாடியுள்ளார் என்பதை நாமறிவோம். அதில் அவர் அண்டகோளம் பற்றியும் பேரண்ட நிலைபற்றியும் பலவாக விளக்கியுள்ளார். அவர் விளக்கிய எல்லையில் நின்று, இன்றைய விஞ்ஞானிகள் இன்னும் பல காலம் முயன்றால்தான் பல உண்மைகளைப் பெற முடியும். பேரண்ட கோளத்தையும் அவற்றின் செறிவையும் அவற்றில் உள்ள பல அண்ட கோளங்களையும் அவற்றையெல்லாம் ஆக்கும் ஆண்டவனையும் எண்ணுகின்ற மாணிக்கவாசகருக்கு ஒரு சிறந்த உவமை நினைவுக்கு