பக்கம்:ஓங்குக உலகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஓங்குக உலகம்



அப்போது ஒருவர் பண்டிதமணியை நோக்கி ‘தாங்கள் குழந்தைபோல் பேசுகிறீர்கள்’ என்றார். உடனே பண்டிதமணி அவர்கள் ‘ஆம் நான் குழந்தை தான். என்னால் நடக்க முடியாது! எனக்குப் பற்கள் இல்லை. குழந்தையாயிருப்பதற்கு வேறு என்ன வேண்டும்’ என்றார். அனைவரும் நகைத்தோம். இவ்வாறு பலப்பல விதமான பேச்சுக்களை அவர்கள் பேசுவார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே தமிழ் மன்றச் செயலாளனாக நான் இருந்த காலத்தில் (1933-34) அன்றைய செட்டி நாட்டு அரசர் நாண்மங்கல விழாவின் போது பண்டிதமணி உட்பட அன்றைய தமிழகப் பேரறிஞர் அனைவரும் வந்து கலந்துகொண்டனர். அவர்களுடன் தமிழ் மன்றத்தினர் எடுத்துக்கொண்ட புகைப் படத்தினை இன்றும் நான் போற்றிக் காக்கின்றேன். அதில் பண்டிதமணி அவர்களின் தோற்றம் எடுப்பாக உள்ளது. அதில் அக்காலத்திய பிற்காலத்திய பெரும் புலவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பண்டிதமணி அவர்தம் தெளிந்த வடமொழி, தமிழ்ப் புலமையும் சைவநெறி பற்றிய தளரா உணர்வும் பழகும் நல்ல பண்பும் எடுப்பான தோற்றப் பொலிவும் என்னால் என்றும் மறக்கமுடியாதவை.

—1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/69&oldid=1135799" இலிருந்து மீள்விக்கப்பட்டது