பக்கம்:ஓங்குக உலகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஓங்குக உலகம்


உதவினார். இவையன்றிப் பலவகைப் பொதுப்பணிகளையும் செய்து சமுதாயத்தைக் கைதூக்கிவிட்டார்.

அக் காலத்திய நிலையில் ஆங்கிலேயருக்கும் நவாபுகளுக்கும் இடையில் பல இடங்களில் நிலவரி முதலியவற்றைத் திரட்டித் தருவதிலும் பிற பணிகளிலும் ஈடுபட்ட பச்சையப்பர், தம் நிலையினைச் செல்வத்தாலும் செல்வாக்காலும் உயர்த்திக்கொண்டார். தமிழ் நாட்டுத் தென்பகுதியில் இவர்தம் உதவியை வேண்டினர் ஆங்கிலேயர். அங்கேயும் சென்று ஒல்லும் வகையில் உதவி அவர்களுடன் நின்றார்; பின் தஞ்சை அரசருடன் கலந்து பல பணிகளை மேற்கொண்டார். மொத்தத்தில் தமிழ்நாடு முழுதும் பச்சையப்பரின் பணிபுரி திறனும் செயல் நலனும் சிறந்தோங்க, அவர்தம் வாழ்வும் வளமும் செல்வமும் செல்வாக்கும் பெருகின.

இத்தகைய பெரும் பணிகளுக்கிடையிலேதான் பச்சையப்பர் சமயப் பணியினையும் தளராது செய்து வந்தார். சத்திரங்கள் கட்டினார்-கோயில்களைப் புதுப்பித்தார்-அன்ன சாலைகள் அமைத்தார். தில்லைப் பெருமானுக்குப் பல திருப்பணிகள் புரிந்தார். இன்று பச்சையப்பர் அறப்பணி நடவாத பெருங்கோயில்கள் நாட்டில் இல்லை எனலாம்.

இவர் சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் கூவம் ஆற்றங்கரையில் ஒரு வீடுகட்டிக் கொண்டு தங்கினார். இவர் இருந்த தெருவிற்குக் ‘காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் தெரு’ என்றே பெயரிட்டார்கள். ஆயினும் இன்று அப் பெயர்ப் பலகைகூட அங்கே இல்லாத நிலையில் உள்ளது. சென்னை நகராட்சியாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/81&oldid=1127573" இலிருந்து மீள்விக்கப்பட்டது