இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
புனிதச் சிலுவை
புன்னகை சிந்தப் பழகுகின்ற பாப்பாவைப் போன்று இளஞ்சூரியன் அப்போதுதான் பூவுலகைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை சொரியத் தொடங்கியிருந்தான்.
கீழ்வாசல், மிகுந்த அழகுடனும் நிறைந்த சுறுசுறுப்புடனும் விளங்கிக்கொண்டிருந்தது.
உமைபாலன் துவைத்து உலர்த்திய உடுப்புக்கள் துலாம்பரமாகப் பளிச்சிடவும், நெற்றியில் பூசப்பட்ட திருநீறு பக்திபூர்வமாக மின்னவும் நடந்து வந்து, நேற்று வரச்சொன்ன அந்த ஹோட்டலுக்குள் பிரவேசித்தான். அவன் தன்னையும் அறியாமல், கைகளைக் குவித்து வணங்க எத்தனம் செய்தான்.
ஆனால் என்ன ஏமாற்றம்!
கல்லாவில் தடிமனை மனிதர் ஒருவர் அல்லவோ வீற்றிருந்தார் ! ...
பின்வாங்கினான். உணவுக் கடையின் பெயரை மீண்டும் படித்தான். அட்டியில்லை; லக்ஷ்மி விலாஸ் ஹோட்டல்தான் !