68
ஓ, மனிதா!
‘மதுவில் இருக்கிறது’ என்கிறான் குடிகாரன்; மங்கையில் இருக்கிறது என்கிறான் பெண் பித்தன்.
ஞானியோ, ‘மதுவிலும் மங்கையிலும் உள்ள நிம்மதி ஒரு கணந்தான்; முக்தியில் தான் அது நிரந்தரமாக இருக்கிறது’ என்கிறான்.
இந்த ஞானிகளில் இன்று எத்தனைப் பேர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களாக, விவேகானந்தர்களாக இருக்கிறார்கள்?
சொல்வது கடினம்,
அது போகட்டும்; உன்னைப் பொறுத்தவரை நீ அந்த நிம்மதி எங்கே இருக்கிறதென்று நினைக்கிறாய்?
‘கண்டு கொண்டேன்; கண்டுகொண்டேன்; நிம்மதி வேறு எங்கேயும் இல்லை, என் உள்ளத்தில் தான் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டேன்!’ என்று ‘நாராயணா’ என்னும் நாமத்தைக் கண்டு கொண்ட வைணவன் மாதிரி நீயும் குதிக்கிறாயா?
நில்; அப்படியெல்லாம் நினைத்து உன்னை நீயே மேலும் மேலும் ஏமாற்றிக் கொண்டிருக்காதே!
ஏனெனில், நீ எப்போது சொத்துரிமையை அடைந்தாயோ, அப்போதே உன் உள்ளத்தில் இருந்த ‘நிம்மதி’ உன்னை விட்டுப் போய் விட்டது,
அதற்குப் பதிலாக எத்தனையோ சொந்தங்களும் பந்தங்களும், ஆசைகளும் பாசங்களும் வந்து உன்னை அடைந்துவிட்டன.
இனி அவற்றை என்னைப் போல் நீயும் அவ்வப் போது உதறி எறிந்து விட்டு எந்தவிதமான கவலையும் இல்லாமல் நீ வாழ முடியுமென்று நினைக்கிறாயா?