பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

7


அதேசமயம், ஏழையின் குடிலில் அன்புடன் இடுகின்ற உப்பற்ற கூழ் அவர் நெஞ்சிலே இடம் பெறும் அங்கே கவிதையும் மலர்ந்து இலக்கிய நிலைபெறும்!

சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்பெற்று விளங்கியவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், அணிவகைகள் முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை."கம்பரின் வாக்கு அதன் இனிமையே இனிமை! அதன் பொருள் வளமே வளம்?” என்று வாயோயாது வியந்து வியந்து பாராட்டி வந்தனர்.

ஒளவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலிப்புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன.

ஒருசமயம், கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் அத்துணைச் சிறப்பு எதனையும் காணாத ஒளவையார், அந்த உரைகளைக் கேட்டுச் சிரித்தவண்ணம் இருந்தார்.

தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னன், அவரது முகபாவத்தை நோக்கினான். தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. "தங்கள் கருத்து யாதோ?” எனக் கேட்டுவிட்டான். அப்போது, ஒளவையார் சொன்னது இச்செய்யுள்.

“கவிதை ஒன்றைப் பாராட்டும்போது, அதன்கண் அமைந்துள்ள சொல்நயம் பொருள்நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ 'கம்பரின் பாட்டு' என்பதற் காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்துத்தான் நான் சிரித்தேன்".

“எளிமையும் புலமை நலமும் பெற்றவர்கள் இங்கே எளிதில் பாரட்டுப் பெறுவது நிகழாது. இந்த அவையின் மதிப்புக்கு உரியவராவதற்குப் பிறபிற ஆரவாரத் தகுதிகளும் நிறைய வேண்டியதிருக்கின்றது” என்றார் ஒளவையார்.

"விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும்-அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.