பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20

வழியிலே குறுக்கிட்ட மரக்கிளைகளை அது சாமர்த்தியமாக ஒடித்தெறிந்துகொண்டு சென்றது. அப்படிச் செய்திராவிடில் அக்கிளைகள் அவர்கள் மீது மோதி, அவர்களைக் கீழே தள்ளியிருக்கும். மரஞ்செடிகளை வெட்டி ஒதுக்கியிருந்த ஒரு பகுதியிலே, வெகு துாரத்திலே காணப்பட்ட சில காட்டு யானைகளை அவர்கள் பார்த்தார்கள். கால்களை மறைக்கும்படியாக வளர்ந்திருந்த புல்லைக் கற்றையாகப் பிடுங்கித் தமது துதிக்கைகளை ஆட்டிக்கொண்டு அவை தின்று கொண்டிருந்தன. பார்ப்பதற்கு அவை பெரிய நிழல்களைப் போல மிக சாந்தமாகத் தோன்றின. ஆனால் அந்த இடத்தைவிட்டுப் புறப்படத் தீர்மானித்தபோது ஒரு யானை குதுாகலத்தோடு ஒரு மரத்தைத் தடாலென்று ஒடித்துத் தள்ளிவிட்டது. விளைச்சல் நிலங்களுக்கு யானைகள் வராமல் தடுப்பதற்காக அந்தப் பக்கத்தில் ஆழமான குழிகளைத் தோண்டி வைப்பார்கள். விலங்குக்காட்சி சாலைகளிலுள்ள யானைகள் இவ்வாறு எதேச்சையாகத் திரியவும் மேயவும் விளையாடவும் முடியாமலிருப்பதைப்பற்றி ஜூடி எண்ணமிட்டுக்கொண்டேயிருந்தாள். அதன் பிறகு அவர்கள் ஒரு காட்டெருமையைப் பார்த்தார்கள். பிறகு சிறு புதர்களுக்கும் மூங்கில் புதர்களுக்குமிடையே, கருமையான ஒரு பெரிய விலங்கைப் பார்த்தனர். கரடியென்று பின்னால் தெரிந்தது. தபால் தலைகள் சேகரிக்கும் பையனுக்கும் அப்பொழுது உற்சாகமுண்டாகிவிட்டது. இன்னும் பல விலங்குகளைப் பார்க்கவேண்டுமென்று ஜூடிக்கு ஆசை. குரங்குகளும் சிறிய மர அணில்களும் எப்பொழுதும் கண்ணுக்குத் தென்பட்டன. பார்க்கவேண்டுமென்றே ஆவலைத் துண்டும்படியான பிராணிகள் இந்தியாவிலே நிறைய இருக்கும். அவற்றைப் பார்க்காமலிருப்பது அவமானமாகத் தோன்றியது. ஒவ்வொரு இரவிலும் உறங்குவதற்கு முன்னால் அவள் அந்த யானைகளைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பாள்.