பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


சுண்ணாம்பை வெண்ணெயென்று நம்பி விட்டேன்
சுள்ளானைத் தும்பியென்(று) ஏமாந்து விட்டேன்
வெண்மையென்ற காரணத்தால் கூழாங் கல்லை
விலையுயர்ந்த முத்தென்று மோசம் போனேன்
கண்ணாடித் துண்டத்தை வைரம் என்றேன்
கழிநீரைத் தேனென்றேன் : கனிச்சா றென்றேன்.
பண்ணென்றேன் கொட்டாவி தன்னை ; உன்னைப்
பத்தினியென் றிதுவரையில் எண்ணிவிட்டேன்.

கானகத்து வெண்மயிலே! மேனி யில்பூக்
கண்காட்சி நடத்துகின்ற வண்ணப் பெண்ணே!
தேனிலவே! வானவில்லின் மகளே! மானே!
தித்திப்பின் விளைநிலமே! இயற்கை உன்பால்
வானுயர்ந்த பேரழகை வாரி வைத்தும்
வட்டநிலா வைமுகமாய் ஒட்ட வைத்தும்
மேனியெங்கும் தேனெடுத்துப் பூசி வைத்தும்
மேலான கற்பினையேன் வைக்க வில்லை?

நஞ்சிருக்கும் நாகத்தின் அழகும், உன்றன்
நளினமலர்ப் பெண்ணழகும் ஒன்றே; உன்னை
வஞ்சத்தின் கலையுருவம் என்பேன்; வைர
வாளென்பேன்; வளர்ந்துவரும் உனது குற்றம்
பிஞ்சாக இருக்கையிலே உன்றன் ஆவி
பிரித்துவிடத் தடிக்கின்றேன்; இல்லா விட்டால்
கொஞ்சுமொழித் தூண்டிலினை எடுத்து வீசிக்
குவலயத்தை யேகெடுக்கத் தயங்க மாட்டாய்.