கற்புச் சிறை
அபெலார்டு-ஹெலாய் என்ற காதற் பறவைகளின் வாழ்க்கை ஒரு கண்ணீர் வரலாறு. உலகில் உள்ள புகழ் பெற்ற எல்லாக் காதற் கதைகளையும், வரலாறுகளையும், படித்திருக்கிறேன். ஆனால் எந்த ஒரு கதையும், வரலாறும் என் உள்ளத்தை இப்படி உலுக்கியதில்லை.
கி. பி. 1116ஆம் ஆண்டு, பீட்டர் அபெலார்டு (Peter Abellard) தன் முப்பத்தேழாவது வயதில், பிரெஞ்சு பல்கலைக்கழகத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த 'தத்துவப் பண்டாரகர்' பட்டம் பெற்று, பாரீசு பல்கலைக் கழகத்தில் தருக்கநூற் பேராசிரியனாக அமர்ந்தான். மேலும் அவன் ஒரு பாதிரி; நாட்டர்டாம் மாதாகோவிற் குருக்களில் ஒருவன்; சமயக் கொள்கையில் புதுமை நோக்கம் கொண்டவன். அவன் புலமைத்தேர் ஐரோப்பாக் கண்டத்தில் கொடிகட்டிப் பறந்தது. செல்வக் குடும்பத்தில் பிறந்த அபெலார்டு அழகனுங்கூட.
ஹெலாய் (Heloise) பத்தொன்பது வயதுக் கொத்து மலர்: பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறிய கிள்ளை, பாரிசில் தன் மாமன் வீட்டில் தங்கியிருந்த அவள் அபெலார்டின் அறிவு வெளிச்சத்தின் முன்னால் கண்கூசி நின்றான். அவள் அவனுக்கு மாணவியானாள். கல்வியில் தொடங்கிய அவர்கள் நட்பு, புள்ளியில்லாக் கல்வியில் போய் முடிந்தது.
க. தி. 5