பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


பொட்டுக்கும் பூக்க ளுக்கும்
புதுப்புதுச் சேலை கட்கும்
பிட்டுக்கும் தேங்கு ழற்கும்
பிரியம்நான் கொண்டே னேனும்
கொட்டைப்பு ளிக்கும், நன்றாய்க்
கொழித்தமண் ணுக்கும், மாங்காய்த்
தட்டுக்கும் கொண்ட ஆவல்
தணியவே இல்லை நாக்கில்.

வயிற்றினில் இன்பத் துள்ளல்
வளர்வதை அறிந்த என்தாய்
கயற்கருங் கண்ணிக் கின்று
கைவளை பூட்டல் என்றாள்.
அயற்புறத் தார்கள் , சுற்றம்
அனைவரும் வந்து சேர்ந்தார்;
செயற்கருஞ் செயல்செய் தார்போல்
செம்மாந்து வீற்றி ருந்தேன்.

பேறுகா லம்நெ ருங்கப்
பெற்றோரும் மாமி யாரும்
வேறுபேச் செதுவும் பேச
விரும்புவ தில்லை; வாழை
தாறுபோ டுதற்கு முன்னால்,
தலைவனா? பெண்ணா? என்ற
போரிலே உள்ளார்; நானோ
பூரிப்புத் தேரில் உள்ளேன்.