பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

முடித்த சில ஆண்டுகளில் ஷாஜகானை, அவர் மகனான ஒளரங்கசேப் கைது செய்து, ஒரு மாளிகையில் சிறைவைத்து விட்டார். சிறைப்பட்ட அம்மாளிகையில் இருந்தவண்ணம், தம் அன்பு மனைவியின் சமாதியை நிலாக்கால இரவில் மணிக்கணக்காக ஷாஜகான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாராம்.

இப்பளிங்குச் சமாதியின் இரு பக்கங்களிலும், செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட இரண்டு மாபெரும் கூடங்கள் உள்ளன. ஒன்று, முக்கியமான நிகழ்ச்சிகளின் போது அரசர் உள்பட மக்கள் எல்லாரும் கூடும் அவைக் கூடம், மற்றொன்று, சடங்குகள் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட கூடம். செந்நிறமான இவ்விரண்டு கூடங்களுக்கும் இடையில் வெண்மையான பளிங்குச் சமாதி மிகவும் எடுப்பாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. தாஜ்மகாலை அருகிலிருந்து பார்ப்பதை விடத் தொலைவிலிருந்து கண்டால், மிகவும் பேரழகோடு தென்படும். இக் கட்டடத்தின் வெளி உருவ அமைப்புப் போற்றத் தகுந்ததாக உள்ளது.

தாஜ்மகாலின் உட்புறத்தில் சென்று பார்த்தால் சிற்பக்கலையின் முழுச் சிறப்பையும் காணலாம். உட்சுவரில் சிற்ப வேலைப்பாடு இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அவைகளைக் காணும் போது, அவற்றை உருவாக்கிய சிற்பியின் கை வண்ணத்தை எண்ணி எண்ணி வியவாமல் இருக்க முடியாது. முக்கியமான சிற்பங்களின் நடுவே கெம்பு, மரகதம், நீலம், வைடூரியம், கோமேதகம்,