பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

மகாலின் அழகில் செம்பாதி அழிந்து விட்டது என்று கூறலாம். நம் நாடு விடுதலையடைந்த பிறகு நம் நாட்டு அரசியலார் அருமுயற்சி செய்து, பெரும் பொருட் செலவில் இத்தோட்டத்திற்குப் புத்துயிர் வழங்கினர். இக்காவனம் இன்று கண்ணைக் கவரும் பூவனமாகக் காட்சியளித்துக் கண்டவர் உள்ளத்தைச் சுண்டியிழுக்கிறது.

தாஜ்மகாலைப் பழுது பார்க்கும் வேலை, அது கட்டி முடிக்கப் பெற்ற நான்காம் ஆண்டிலேயே முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டது. கி. பி. 1652 ஆம் ஆண்டில் கட்டடத்திற்குக் கீழே பூமிக்குள் அமைக்கப்பட்டிருந்த அறைகளில் அடிக்கடி வெடிப்பு ஏற்பட்டது. தாஜ்மகாலின் கடைக்கால் அடி நில நீரூற்றுக்கள் வரை ஆழமாக அமைந்திருந்தது. யமுனை ஆற்றில் ஏற்பட்ட மிகுந்த வெள்ளப்பெருக்கே இவ் வெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அக்காலக் கட்டடக் கலைஞர்கள் கருதினர். இதை முதன் முதலில் கண்டவர் ஔரங்கசேப்பே. அவர் இதுபற்றி ஷாஜகானுக்கு எழுதித் தெரிவித்தார். பிறகு அவ் வெடிப்புகள் பழுது பார்க்கப்பட்டன. இச் செய்தி ‘பாத்ஷா நாமா’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜ்மகாலுக்கு ஏற்படும் பழுதுகளில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது, அதன் கற்களில் ஏற்படும் வெடிப்புகளே. இவ் வெடிப்புகள் இருவிதக் காரணங்களால் ஏற்படுகின்றன. தட்ப வெப்ப நிலைகளின் மாறுதலால் கற்களில் ஏற்படும் சுருக்கம்