பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அவன் கையில் பூந்தழை கொண்டு அவளை நோக்கி “அம்மையீர் ! இவ்வழியே யான் எய்த அம்புபட்டு யானை ஒன்றுபோந்ததுண்டோ?,” என்று வினாவினான். பிறகு தான் கொணர்ந்த பூந்தழையை ஈந்து. “இதனை நும் தலைவி அணியுமாறு செய்க,” என்று வேண்டினான். இப்படிக் கெஞ்சிக் கூத்தாடி நின்ற தலைவனைக்கண்ட தோழி, அவன் செயலை எள்ளி நகையாடுவாள்போல,

‘மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை ஏந்திக் கடமா வினாய்க்கையில் வில்இன்றியே

பித்தழை யா நிற்பரால் என்ன பாவம் பெரியவரே’

என்று கூறிய கூற்று, எத்துணை நகைச்சுவை பயக்க வல்லதாகக் காணப்படுகின்றது பாருங்கள்! கையில் வில் இல்லை. ஆனால், தழை இருக்கிறது. இப்படிப் பட்டவர் யானையை எய்ததாகக் கூறுகிறார். இக்கூற்றுத் தம்மைப் பித்தர் என்பதை அறிவித்து நிற்கிறது. பார்த்தால் பெரியவராய்க் காணப்படுகிறார். ‘ஐயோ பாவம்’ என்று கூறப்பட்டவை நம்மை விடா நகைப்பினை நகைக்கச் செய்கின்றன அல்லவா?